சிறைச்சாலைகளில், 89 அரசியல்கைதிகள் உள்ள நிலையில், அரசியல் கைதிகள் என்று எவருமே இல்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ள கருத்தானது, கண்டிக்கத்தக்கது என வட மாகாண முன்னாள் உறுப்பினர் குகதாஸ் தெரிவித்தார்.
யாழில் இடம்பெற்ற செய்திளார் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், ஜனாதிபதியின் கருத்து, தமிழ் - சிங்கள மக்களின் உறவில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் குற்றம் சுமத்தினார்.
இவ்விடயம் தொடர்பாக குகதாஸ் மேலும் கூறியுள்ளதாவது, தமிழ் மக்களின் வாக்குகள், காணாமற்போனோர், நீதி விசாரணை ஆகியவை தொடர்பாக ஐனாதிபதி பல்வேறு கருத்துக்களை கூறியிருக்கின்றார்.
அவருடைய இந்தக் கருத்துக்கள் தமிழ் மக்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது. அது மட்டுமல்லாமல் அந்தக் கருத்துக்களை ஒருபோதும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவும் முடியாது.
குறிப்பாக தமிழ் மக்களின் வாக்குகள் இனவாதம் என்று ஐனாதிபதி கூறியிருக்கின்றார். ஆனால் நாட்டில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஒரு சிங்கள தலைவரை தெரிவு செய்வதற்குத்தான் வாக்களித்திருந்தனர். அவ்வாறுதான் ஒவ்வொரு ஐனாதிபதித் தேர்தல்களிலும் வாக்களித்துள்ளார்கள்.
இதனை ஐனாதிபதியும் அறிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு தமிழ் மக்கள், தமது வாக்குகளை அளிக்கின்றபோது எதனடிப்படையில் தமிழ் மக்களின் வாக்குகளை, இனவாதம் என்று ஐனாதிபதி கூறுகின்றார்?
ஆகவே, தமிழ் மக்களின் வாக்குகள் இனவாதம் அல்ல என்பதை ஐனாதிபதி தேர்தல் வாக்களிப்பு தெளிவாக எடுத்துக் கூறியிருக்கின்றதை பார்க்க வேண்டும்.
அதேபோல காணாமற் போனோர் தொடர்பிலும் ஐனாதிபதி கூறியிருக்கின்ற கருத்துக்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவையாகவே இருக்கின்றது. தமது உறவுகள் தொடர்பாக மக்கள் போராடி வருகின்றனர்.
அதேபோன்று அந்த மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்று மக்கள் பிரதிநிதிகளும் கோரி வருகின்றனர். இவை இவ்வாறிருக்கையில் எல்லாவற்றையும் மறைக்கின்ற அல்லது மழுங்கடிக்கின்ற வகையில் ஐனாதிபதியின் கருத்துக்கள் அமைந்துள்ளன.
ஆகவே தமிழ் மக்கள் சார்ந்து ஜனாதிபதியால் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் அனைத்தும் தமிழ் மக்களை ஒட்டு மொத்தமாக வேதனைக்குள்ளாக்குகின்றது. மேலும் இத்தகைய கருத்துக்கள் நாட்டின் இன நல்லினக்கத்தை ஏற்படுத்துவதற்கு பெரியளவில் பாதிப்பாக இருக்கின்றது.
எனவே தமிழ் மக்களின் நியாயாமான கோரிக்கைகளை புரிந்து கொண்டு ஐனாதிபதி செயற்பட வேண்டுமே தவிர தமிழ் மக்களுக்கு எதிரான கருத்துக்களை கூறுவதோ அல்லது செயற்பாடுகளை முன்னெடுப்பதையோ தவிர்த்துக் கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
யாழ். விஷேட நிருபர்
No comments:
Post a Comment