கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பிரிட்டன் முழுவதும் 3 வாரங்கள் முடக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
பிரிட்டன் நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 335 பேர் பலியாகி இருக்கிறார்கள். நேற்று 54 பேர் உயிரிழந்தனர். 6 ஆயிரத்து 650 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா பரவாமல் தடுக்க பிரிட்டன் முழுவதும் 3 வாரங்கள் முடக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பிரிட்டன் 3 வாரங்களுக்கு முடக்கப்படுகிறது. திருமணம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் மூன்று வாரங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும்.
உணவு, மருந்து ஆகிய அத்தியவாசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறந்து இருக்கும். அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அனுமதிக்கப்படுவார்கள். பொது இடங்களில் இரண்டு பேருக்கு மேல் கூடினால் கடும் தண்டனை வழங்கப்படும்.
இங்கிலாந்து மக்களுக்கு நான் மிக எளிய வழி முறையை தெரிவிப்பது என்னவென்றால் வீடுகளிலேயே இருங்கள் என்பதுதான். இதை நாம் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
ஏனென்றால் வைரசை பரவாமல் தடுப்பதுதான் முக்கியமான விஷயம். உங்களை நண்பர்கள் பார்க்க வேண்டும் என்று கூறினால் மறுத்து விடுங்கள்.
எந்தவொரு பிரதமரும் இதுபோன்ற நடவடிக்கை எடுக்க விரும்பமாட்டார். ஆனால் தற்போது எளிதான வழிகள் எதுவும் இல்லை. முன்னோக்கி செல்லும் வழி கடினமானது. பல உயிர்கள் இழக்கப்படும் என்பதுதான் இன்னும் உண்மையாக இருக்கிறது.
No comments:
Post a Comment