தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பலமுனைப் போட்டிகளே இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் இருக்கின்றது இதனை உணர்ந்து தற்போதுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் புதிதாக வேட்பாளர்களாக நியமனம் செய்யவுள்ளவர்கள் மக்கள் மத்தியில் உள்ளவர்களாகவும் மக்கள் தொடர்பாக சிந்திப்பவர்களையும் உள்வாங்க வேண்டும். இதனை விடுத்து தனிப்பட்ட செல்வாக்கைப் பெற்றுக் கொள்வதற்காக அறிமுகமில்லாதவர்களை நியமிப்பது மக்களுக்குச் செய்கின்ற நியாயமற்ற செயற்பாடு என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கனகரத்தினம் விந்தன் தெரிவித்தார்.
குறித்த விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ கட்சி பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்க முன்னரே அறிமுகமில்லாத ஒரு நபரை வேட்பாளராக அறிவித்துள்ளது. ரெலோவிற்கு கிடைக்கின்ற ஒரு ஆசனத்தையும் இழக்கின்ற செயற்பாடாகவே இது அமைகின்றது.
கூட்டமைப்பிற்கு பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ள நிலையில் அதனை எவ்வாறு சமாளிப்பது என்பது தொடர்பில் இணக்கம் காணப்படவில்லை. கடந்த பாராளுமன்றத்தின் போது பல்வேறு சந்தர்ப்பங்கள் கிடைத்துள்ள போதும் அவை முழுமையாக செய்யப்படவில்லை.
இனப்பிரச்சினைக்கான தீர்வு பல முயற்சிகள் மேற்கொண்டபோது அது கைகூடவில்லை காணாமல் போனோர் மீள்குடியேற்றம் காணி விடுவிப்பு போன்றவற்றுக்கு இன்னமும் முடிவு காணப்படவில்லை.
இந்நிலையில் அடுத்த பாராளுமன்றத் தேர்தலும் இரண்டொரு மாதங்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் எத்தகைய முயற்சிகளும் எடுக்காத நிலையிலேயே உள்ளது.
பாராளுமன்றத் தேர்தலில் தற்போதுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடங்கள் வழங்கப்பட்டு மக்கள் மத்தியில் மக்களுடன் நின்று செயலாற்றுகின்ற கட்சி உறுப்பினர்களுக்கும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுக்கும் இடங்களைக் கொடுத்து அவர்களை வெற்றி பெறச் செய்கின்ற முயற்சியில் ஈடுபட வேண்டும்.
நான் ரெலோ கட்சியின் அனைத்துப் பொறுப்புக்களில் இருந்தும் விலகி சாதாரண உறுப்பினராக இருந்தே செயலாற்றவுள்ளேன் என்பதை கட்சி தலைமைப்பீடத்திற்கு நேரிலேயே வலியுறுத்தியுள்ளேன் என்றார்.
No comments:
Post a Comment