2020 நிறைவடைவதற்குள் நாட்டில் உள்ள அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக உயர் கல்வி மற்றும் தகவல் தொடர்பாடல் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
ராஜகிரிய, கோட்டே பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் போது எந்த அரசியல், கட்சி பாகுபாடுமின்றி அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், கடந்த அரசாங்கத்தின் காலத்தில் கல்வித் துறையில் "சிறந்த பாடசாலை அருகாமையில் உள்ள பாடசாலை" என்ற திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் பிள்ளைகளுக்கு கற்பதற்கு பாடசாலை இல்லாமல் போனதே கண்ட பலன்.
அதேபோன்று பில்லியன் கணக்கான நிதியை செலவழித்து "கம்பெரலிய" என அவர்கள் தொடங்கிய வேலைத்திட்டம் கிராமங்களை மிகமோசமாகப் புரட்டிப்போட்டது என்றே கூறவேண்டும். அதற்காக செயற்பட்ட ஒப்பந்தக்காரர்களுக்கு இன்னும் 130 பில்லியன் ரூபாவை கடந்த அரசாங்கம் வழங்க வேண்டியுள்ளது.
நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தற்போது அந்த அனைத்து ஒப்பந்தக்காரர்களுக்கும் 130 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். அதற்காகவே பாராளுமன்றத்தில் இடைக்கால கணக்கறிக்கை கொண்டு வரப்படவுள்ளது.
நாம் நாட்டில் உள்ள அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலை வாய்ப்புகளை வழங்க தீர்மானித்துள்ளோம். அரசியல், கட்சி வேறுபாடுகளின்றி அனைத்து பட்டதாரிகளுக்கும் நாம் வேலைவாய்ப்புக்களை வழங்குவோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)
No comments:
Post a Comment