மார்ச் முதல் வாரத்தில் பாராளுமன்றம் கலைக்கப்படுமானால் பொதுத் தேர்தலை நடத்துவது குறித்து ஆராய்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் 19 ஆம் திகதி புதன்கிழமை கூடவிருப்பதாக தேர்தல்கள் ஆணைக் குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 14 நாட்களுக்கிடையில் வேட்புமனு கோரப்பட வேண்டும். அதனையடுத்து 6 வாரங்களில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
இதன் பிரகாரம் ஏப்ரல் மாதம் 25 க்கும் 28 க்கும் இடைப்பட்ட ஒரு தினத்தில் தேர்தலை நடத்த வேண்டிய நிலை காணப்படுவதால் இது குறித்து ஆராயும் பொருட்டே புதன்கிழமை ஆணைக் குழுவின் விஷேட கூட்டம் நடைபெறவிருப்பதாக ஆணைக் குழுத் தலைவர் குறிப்பிட்டார்.
இதேவேளை 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கமைய பாராளுமன்றத்தை மார்ச் முதலாம் திகதிக்குப் பின்னர் எந்த வேளையிலும் கலைக்க முடியுமென சட்ட மா அதிபர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எழுத்து மூலம் அறிவித்திருக்கிறார்.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பீ. ஜயசுந்தர சட்ட மா அதிபரிடம் இது குறித்து தெளிவுபடுத்துமாறு கோரியிருந்தார்.
இம்மாதம் 28 ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் எப்போது வேண்டுமானாலும் ஜனாதிபதியால் பாராளுமன்றத்தையும் கலைக்க முடியும்.
இந்த நிலையில் பெரும்பாலும் எதிர்வரும் 02 ஆம் திகதி ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைக்கத் தீர்மானித்திருப்பதாக அரச உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தை முன்கூட்டியே கலைப்பதாக இருந்தால் வேட்புமனு கோரும் திகதி வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளும் திகதி, தேர்தல் நடத்தப்படும் திகதி, புதிய பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு போன்ற விடயங்கள் வர்த்தமானியில் பிரகடனப்படுத்தப்பட வேண்டியுள்ளதால் அவை குறித்து தேர்தல்கள் ஆணைக் குழுத் தலைவரிடமிருந்து விபரம் கோரப்பட்டுள்ளது.
எம்.ஏ,எம். நிலாம்
No comments:
Post a Comment