“ஆட்சிக்கு வந்துள்ள ராஜபக்ச அரசு ஐக்கிய தேசியக் கட்சியினரைப் பழிவாங்குவதைப் போல் தமிழ் மக்களையும் பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் தமக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காகத் தமிழ் மக்களை இனவாத, மொழிவாத, மதவாத ரீதியில் பழிவாங்குவதை இந்த அரசு உடன் நிறுத்த வேண்டும்.”
இவ்வாறு வலியுறுத்தினார் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க.
‘தேசிய கீதம்’ இரு மொழிகளிலும் இசைப்பது குறித்து எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது “இனவாத, மொழிவாத, மதவாத செயற்பாடுகளை முன்னோக்கிக் கொண்டு சென்று தமது அரசியல் இருப்பைத் தக்க வைத்துக்கொள்ள ராஜபக்ச அரசு முயற்சிக்கின்றது. அதில் ஒன்றுதான் ‘தேசிய கீதம்’ இரு மொழிகளிலும் இசைப்பது தொடர்பான விவகாரம்.
இலங்கையின் அரசமைப்பின் பிரகாரம் சிங்களம், தமிழ் ஆகிய மொழிகள் தேசிய மொழிகளாகும். இலங்கையின் அரசமைப்பின் பிரகாரம் சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் தேசிய கீதத்தைப் பாட முடியும்.
2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் 2016, 2017, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்து சுதந்திர தின நிகழ்வுகளிலும் தேசிய கீதம் தமிழ்மொழியிலும் பாடப்பட்டு வந்தது. 2020ஆம் ஆண்டு சுதந்திர தின நிகழ்விலும் தேசிய கீதம் சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளும் இசைக்கப்பட வேண்டும்” – என்றார்.
No comments:
Post a Comment