மலையகத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்வரும் தேர்தலில் போட்டியிடாது என அந்த கட்சியின் முக்கிய உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தன்னிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு தெரிவித்துள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் முன்னாள் அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாங்கள் சிறுபான்மை கட்சிகள் அனைத்தும் இந்த தேர்தலில் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் எனவும் இது தொடர்பாக நாம் கலந்து பேசி தீர்மானிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான அமரர் பெரியசாமி சந்திரசேகரனின் 10 வது ஆண்டு நினைவுப் பேருரையும் மலையகத்தில் இருந்து சர்வதேச மட்டத்தில் விளையாட்டுத்துறையில் சாதனை புரிந்த இளைஞர் யுவதிகளை கௌரவிக்கும் நிகழ்வும் நேற்று (01) ஹட்டன் மலையக மக்கள் முன்னணியின் தலைமைக் காரியாலய மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் சிறுபான்மை கட்சிகளுக்கு மிகவும் முக்கியமான ஒரு தேர்தல். அந்த தேர்தலில் நாங்கள் எங்களுடைய அங்கத்தினர்களை அதிகரித்துக் கொள்வதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். அதே நேரத்தில் சிறுபான்மை கட்சிகள் அனைத்து ஒற்றுமையாக செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மலையக நிருபர் தியாகு
No comments:
Post a Comment