பாறுக் ஷிஹான்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏமாற்று வேலைகளுக்கு பின்னால் மக்கள் செல்ல தயாரில்லை . நாட்டில் சிறந்த நிருவாக கட்டமைப்பு ஏற்பட்டிருக்கிறது. நாம் சிறந்த வகையில் பயன்படுத்த முன்வர வேண்டும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் அன்னமலை 2 இல் அமைந்துள்ள வேப்பையடி ஆரம்ப வைத்திய பராமரிப்பு நிலையத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் புதன்கிழமை (1) மாலை 5 மணி முதல் 8 மணிவரை வைத்தியபொறுப்பதிகாரி திருமதி டாக்டர் சித்தி ஜாயிஷா அனீஸ் தலைமையில் நடைபெற்ற போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில் அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனுக்கு ஒன்றை சொல்ல விரும்புகின்றேன். எங்களோடு வந்து இணைந்து கொள்ளுங்கள். தேவையில்லாமல் என்னை பற்றி விமர்சனம் செய்து கூக்குரலிடுவதை நிறுத்துங்கள்.
அன்று ஒரு காணொளியை பார்த்தேன். அவர் என்னைப் பற்றி விமர்சனம் செய்திருந்தார் விமர்சனம் தேவையில்லை என்னுடன் வந்து கோடீஸ்வரன் எம்.பி அவர்கள் இணைந்து கொள்ளுங்கள். அவருக்கு எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தோற்றுப் போய்விடுவோம் என்ற பயம் பிடித்துள்ளது.
அவ்வாறு பயம் கொள்ளாமல் என்னுடன் வந்து இணைந்து ஒற்றுமையாக தேர்தலில் போட்டியிடுவோம் அவ்வாறு சேர்ந்தால்தான் மக்களுக்கு விடிவு வரும் பலத்தை பெறக்கூடிய வகையில் இருக்கின்றோம் நாம் உங்களுக்கான ஒரு அமைச்சு பதவியை பெற்றுத் தருகின்றேன்.
2020ஆம் ஆண்டு ஒரு பொற்காலமாக ஓராண்டாக மாற்றுவோம் மனிதன் வாழ்வதற்காக அந்த வாழ்க்கையை சிறந்த முறையில் வாழ்ந்து காட்டுவோம். தமிழ் சமூகத்துக்கு ஒரு மாற்றம் ஒரு வளர்ச்சி வேண்டும் குடிசையிலிருந்து குடிசையிலே வளர்ந்ததும் செயலிழந்து போவது இல்லை.
ஒரு இலட்சம் வேலை திட்டம் சம்பந்தமாக பல அரசியல்வாதிகள் முறைகேடாக மக்களை பயன்படுத்த பார்க்கின்றனர். இப்போதே விண்ணப்பப்படிவம் நிரப்புவதும் பணம் கேட்பதும் என்ற படலத்தை தொடங்கியுள்ளனர். இந்த வேலைவாய்ப்பு திட்டம் வேலைகளுக்காக வந்தது அது முறையாக வரும்.
நாட்டில் சிறந்த நிருவாக கட்டமைப்பு ஏற்பட்டிருக்கிறது. அவை நாம் சிறந்த வகையில் பயன்படுத்த வேண்டும் அம்பாறை மாவட்டத்தில் ஒரு அபிவிருத்திப் புரட்சி ஏற்படுத்துவதே எனது இலக்கு இன்று அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்கு சென்று பார்வையிடும்போது அங்குள்ள மக்களின் குறைகளைப் கேட்கும்போது மன வேதனையாக உள்ளது.
உதாரணமாக ஒரு மீனவ சமூகத்தை சென்று பார்க்கும்போது அங்குள்ள மீனவர்கள் படகுக்கு அனுமதிப்பத்திரம் இல்லாமல் இருக்கின்றன இதெல்லாம் ஒரு சிறிய விடயம் இவற்றையெல்லாம் உங்கள் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் சென்று பெற்றுக் கொடுத்திருக்க வேண்டும். இவற்றை பெற்றுக் கொடுக்க தவறியுள்ளனர் அரசியல்வாதிகள்.
நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்படுவோம் அம்பாறை மாவட்டம் என்பது குறுகிய வாக்குப் தொகையை கொண்ட மக்கள் உள்ள பிரதேசம் இந்த மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால்தான் இங்கு குறைந்தது இரண்டு பாராளுமன்ற உறுப்பினர் ஆவது பெற்றுக் கொள்ளமுடியும்.
தமிழ் மக்கள் ஏனைய சமூகங்களை விட வாக்களிப்பு வீதத்தை அதிகரிக்க வேண்டும் நமது உரிமையை சிறந்த வகையில் பயன்படுத்த வேண்டும். நாம் வாக்களிக்க செல்லாது எமது பலத்தை இழக்கின்றனர். குறுகிய தொகை கொண்ட மக்களாக இருந்து அந்த வளங்களையும் இழந்தோம் என்றால் எவ்வாறு உரிமையை பெற்றுக் கொள்ள முடியும்.
இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பின்னால் மக்கள் செல்ல தயாரில்லை மக்கள் இன்று மாற்றமடைந்துள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏமாற்று வேலைகளுக்கு பின்னால் செல்லத் தயாராகவும் இல்லை. இன்று பிரதேச சபை உறுப்பினர்கள் தவிசாளர்கள் எங்களுடன் இணைந்துள்ளனர் ஏனென்றால் அவர்களுக்கு விளங்கும் மக்களின் நிலைமை என குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment