கொரோனா வைரஸ் தொற்று நோய் தொடர்பான ஆபத்தை கருத்திற்கொண்டு, சீனாவிலுள்ள மாணவர்களை அங்கிருந்து அழைத்து வர, சலுகையாக, 50% விமானக் கட்டண தள்ளுபடியை ஶ்ரீ லங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.
ஶ்ரீ லங்கன் விமான சேவை விடுத்துள்ள அறிவித்தலிலேயெ இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று நோய் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் விரைவாக செயல்பட்டு, தற்போது சீனாவில் உள்ள இலங்கை மாணவர்கள் வீடு திரும்புவதற்கு ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.
பீஜிங் மற்றும் கென்டனில் இருந்து வழக்கமாக வரும் விமானங்களின் மூலம் நாடு திரும்ப விரும்பும் மாணவர்களுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 50% தள்ளுபடியை வழங்குவதாக ஶ்ரீலங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அறிந்து கொள்ள சீனாவிலுள்ள மாணவர்கள் ஶ்ரீலங்கன் விமான சேவையை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. (+94 777771979)
அது தவிர தற்போது சீனாவில் உள்ள மாணவர்களுக்காக பிரத்தியேக விமானமொன்றை அனுப்புவதற்கு இலங்கை திட்டமிட்டுள்ள நிலையில், இது தொடர்பாக சீனா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளிலும் சிவில் விமான போக்குவரத்து மற்றும் சுகாதார அதிகாரிகள் மற்றும் இலங்கையின் வெளியுறவு அமைச்சு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் நடந்து வருகின்றன.
இதேவேளை, சீனாவிலுள்ள இலங்கையர்களின் தகவல்களை பெற்றுக் கொள்ளும் வகையில், பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்தில் 24 மணி நேரம் இயங்கும் +86-10-65321861/2 எனும் இரு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த தொலைபேசி மூலம் சீனாவிலுள்ள இலங்கையர் மற்றும் அவர்களது உறவினர்கள் தகவல்கள் மற்றும் உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் என வெளி விவகார அமைச்சு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment