எம்.எப்.எம்.பஸீர்
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை அல்லது அவரது குடும்ப உருப்பினர் ஒருவரை கொலை செய்வதன் ஊடாக பாரிய பணத் தொகையைப் பெறலாம் எனவும் வெளிநாட்டில் சென்று வாழக்கூடிய சூழலும் கிடைக்கும் எனவும் கூரி சிலருடன் இணைந்து கொலை சதித்திட்டம் தீட்டியதாக தெரிவித்து ஐந்து இளைஞர்களை கட்டுநாயக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் அவர்களில் நால்வரை விடுவித்த நீதிமன்றம் பிரதான சந்தேக நபராக அடையாளப்படுத்தப்படும் சந்தேக நபரை மட்டும் 72 மணி நேரம் தடுப்பில் வைத்து விசாரிக்க கட்டுநாயக்க பொலிஸாருக்கு இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியமை, கொலை செய்வதற்கு தயாரானமை மற்றும் அதற்காக தூண்டுதல் செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரிப்பதற்கு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
27 வயதான சந்தேகநபர் மட்டக்களப்பு - வாழைச்சேனை - ஓட்டமாவடி, மீராவோடை பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
மினுவாங்கொடை நீதிவான் கேசர சமரதிவாகர இதற்கான அனுமதியை இன்று மாலை வழங்கினார். அதன்படி மட்டக்களப்பு - வாழைச்சேனை - ஓட்டமாவடி, மீராவோடை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபரை தொடர்ந்தும் தடுப்பில் வைத்து விசாரிக்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
கடந்த திங்களன்று கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பொருப்பதிகாரி, உப பொலிஸ் பரிசோதகர் இந்திக தலைமையிலான குழுவினர், சீதுவை - ஜயவர்தனபுர, அமந்தொழுவை பகுதியில் வாடகையில் பெற்ற வீட்டில் தங்கியிருந்த ஐவரைக் கைது செய்தனர்.
வாழைச்சேனை, கிளிநொச்சி - அக்காரயன்குளம், விஷ்வமடு - தர்மபுரம், விஷ்வமடு - கல்லாரு மற்றும் மஸ்கெலியாவைச் சேர்ந்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
அத்தோடு கைது செய்யப்பட்ட நபர்களில் மேலதிக விசாரணையின் பின்னர் நால்வர் விடுவிக்கப்பட்டுள்ளனர். பிரதான சந்தேக நபரிடம் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment