பண்டிகைக் காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே பலத்த மழை காரணமாக பெரும்போக செய்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. மூன்று வாரங்களுக்கு முன்னரே பெரும்போக செய்கை ஆரம்பிக்கப்பட்டது.
எனினும், நாட்டின் பல பகுதிகளில் தொடரும் பலத்த மழையுடனான வானிலை காரணமாக பல ஏக்கர் பயிர் நிலங்கள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளன. இந்த நிலையில், சந்தையில் அரிசியின் விலை அதிகரித்துள்ளது.
நவம்பர் மாதம் முதல் வாரத்தில் ஒரு கிலோகிராம் சம்பா அரிசி 95 ரூபாவாகக் காணப்பட்டாலும், தற்போது 115 ரூபாவாக விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சலுகை விலையில் அரிசி வழங்குவதற்கு அரிசி ஆலை உரிமையாளர்கள் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். இந்த பண்டிகை காலத்தில் நுகர்வோருக்கு சலுகை விலையில் அரிசி வழங்க பாரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளதாக, நிதி, பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று (10) ஜனாதிபதி செயலகத்தில் பாரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களுடனான சந்திப்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு கிலோ நாட்டு அரிசியை ரூ. 98 எனும் உச்சபட்ச சில்லறை விலையிலும், ஒரு கிலோ சம்பா அரிசி ரூ. 99 எனும் உச்சபட்ச சில்லறை விலையிலும் விற்க இதன்போது இணக்கம் காணப்பட்டுள்ளது.
பண்டிகை காலத்தில் சலுகை விலையில் அரிசியை விநியோகிக்க பெரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் எடுத்துள்ள இந்த முடிவிற்கு அமைய, நுகர்வோருக்கு எவ்வித பற்றாக்குறையும் இன்றி அரிசியை கொள்வனவு செய்ய முடியும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளை (11) முதல் அரிசி ஆலை விநியோக வலையமைப்பு மூலம் அரிசி ஆலை உரிமையாளர்களின் வலையமைப்பு ஊடாக சலுகை விலையில் அரிசியை விற்பனை செய்யும் வகையில் அரிசி விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
No comments:
Post a Comment