நாரஹேன்பிட்டி பார்க் வீதியிலிருந்து இன்று காலை இளைஞர் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டது. அருகிலுள்ள மாடி வீடொன்றில் தங்கியிருந்தவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நாரஹேன்பிட்டி பார்க் வீதியில் ஷாலிகா விளையாட்டரங்கிற்கு அருகிலுள்ள வீதியிலிருந்து இந்த சடலம் மீட்கப்பட்டது.
இன்று காலை 6 மணியளவில் சடலமொன்று வடிகாணுக்குள் இருப்பதை அவதானித்த வியாபாரி ஒருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தார்.
சடலம் மீட்கப்பட்ட இடத்திலிருந்து 50 மீட்டருக்கும் குறைவான தூரத்திலேயே குறித்த இளைஞர் தங்கியிருந்த மாடி வீடு அமைந்துள்ளது.
சடலத்திற்கு அருகில் பணப்பை ஒன்றும், கையடக்க தொலைபேசி ஒன்றும் மீட்கப்பட்டதுடன் சடலத்தின் தலைக்கருகில் இரண்டு 100 ரூபா நோட்டுக்கள் வீழ்ந்திருந்தன.
சடலத்தின் தலைப்பகுதியில் காயமேற்பட்டிருந்ததுடன் இடுப்பு பகுதியிலும், கீறல் தடங்கள் காணப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
புபுது பெரேரா எனும் இந்த இளைஞர் நேற்றிரவு கோட்டை பகுதியில் நடைபெற்ற விருந்துபசாரத்தில் கலந்துகொண்டு தமது நண்பருடன் வீடு திரும்பியமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வாடகை வாகனமொன்றில் தாம் தமது வீட்டிற்கு அருகில் இறங்கியதன் பின்னர் அதே வாகனத்தில் புபுது பெரேரா வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றதாக நண்பர் பொலிஸாரிடம் வாக்குமூலமளித்துள்ளார்.
சிறிய ரக கார் ஒன்று அதிகாலை 3 மணியளவில் குறித்த இடத்திற்கு வந்து சற்று நேரத்தில் திரும்பிச்செல்லும் காட்சி சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு அருகிலுள்ள பல்பொருள் அங்காடியொன்றின் பாதுகாப்பு கெமராக்களில் பதிவாகியுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட புபுது பெரேரா என்ற இளைஞர் வர்த்தக பிரசார நிறுவனம் ஒன்றின் முகாமையாளராக செயற்பட்டு வந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment