அமைச்சு பதவிகள் இருந்தால்த்தான் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு என்ற முஸ்லிம்களின் சிந்தனை பிழை என்பதை இறைவன் காட்டியுள்ளான். என ஆளும் பொதுஜன பெரமுன கட்சியின் பங்காளிக்கட்சியான உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, எந்தவொரு முஸ்லிம் அமைச்சரும் இல்லாத நிலையிலும் முஸ்லிம் சமூகம் இந்நாட்டில் இன்னமும் வாழத்தான் செய்கிறது.
அமைச்சு பதவி இல்லாமல் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் நீண்ட காலம் வாழவில்லையா?
அதேவேளை முஸ்லிம் அமைச்சர்கள் இல்லாத போதும் பல முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்னமும் உள்ளனர். இவர்களுக்கான அரச ஒதுக்கீடும் உள்ளன.
இவர்கள் முயற்சித்தால் நிச்சயம் அரசின் மூலம் சமூகத்துக்கான சேவையை பெற்றுக்கொடுக்க முடியும். அரசின் புரடகோல் முறையின்படி அமைச்சர்களுக்கு அடுத்ததாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே சலுகைகளும் கவுரமும் அதிகாரமும் உண்டு.
முன்னர் அமைச்சர்களாக இருந்த போது இந்த பாராளுமன்ற உறுப்பினர்களை மக்கள் சந்திப்பது என்பது மிக கஷ்டமாக இருந்தது. இப்போது இவர்கள் மக்கள் காலடிக்கு சென்று மக்கள் பிரச்சினைகளை பார்க்கும் நிலையை ஜனாதிபதி கோட்டா ஏற்படுத்தியுள்ளார்.
முஸ்லிம் சமூகம் வாக்குகளை ஒரே பக்கம் அள்ளிப்போட்டதால் ஏற்பட்ட விளைவுகள்தான் அமைச்சர்கள் இல்லாமை என்பதாகும்.
இனியாவது முஸ்லிம்கள் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவு முஸ்லிம் கட்சிகளுக்கும் பொதுஜன பெரமுன கட்சி ஆதரவு முஸ்லிம் கட்சிகளுக்கும் வாக்குகளை பிரித்து வழங்கும் புத்திசாலித்தனத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
அன்று தமிழர்கள் சிங்கள அரசுகளை எதிர்த்து நின்றதால் பந்தாடப்பட்டார்கள்.
இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகளின் முட்டாள்த்தனத்தினால் பெரும்பான்மை சிங்கள மக்களின் எதிரிகளாக முஸ்லிம் சமூகம் காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றின் விளைவே மொட்டு தரப்பிலும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இல்லாமை ஆகும்.
முஸ்லிம் காங்கிரசை கிழக்கில் இருந்து விரட்டாதவரை முஸ்லிம் சமூகத்துக்கு பாதிப்புத்தான் என ஆளும் பொதுஜன பெரமுன கட்சியின் பங்காளிக்கட்சியான உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்தார்.
No comments:
Post a Comment