இலங்கை வரலாற்றில் தமிழ் மக்கள் மிகவும் கொடூரமாக தாக்கப்பட்டு படுமோசமாகப் பாதிக்கப்பட்டது ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்திலேயே என்பதை யாரும் மறுக்கமுடியாது.
இவ்வாறு தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினரும் முன்னாள் கல்முனை மாநகர சபையின் எதிர்க் கட்சித் தலைவருமான குஞ்சித்தம்பி ஏகாம்பரம் (வயது 87) தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனையின் மட்டு.மாவட்ட இளைஞர் அணித் தலைவர் ரி.ஹரிப்பிரதாப் மற்றும் கல்முனை நிமால் தலைமையிலான இளைஞர் குழுவினரின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் கல்முனையில் இடம்பெற்றன.
அச்சமயம் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது, அம்மா என்றாலும் பெண்தான் மகள் என்றாலும் பெண்தான். தமிழ் மக்களைப் பொறுத்தவரை சுதந்திரக் கட்சியும் ஒன்றுதான் ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றுதான். அதேபோல் மஹிந்தவும் சரி ரணிலும் சரி. இருவரும் ஒன்றுதான்.
அனைவரும் சிறுபான்மையினரைப் பிரித்து துரோகம் செய்தவர்களே. அடக்கி ஆண்டவர்களே. எனினும் இன்றைய நிலையில் தேர்தலை பகிஸ்கரிக்காது வாக்களிக்க வேண்டும்.
எனவே இந்த இரு தரப்பில் ஓரளவாவது யார் நல்லவர் என்று பார்த்து வாக்களிக்க வேண்டியது எமது கடமை. எமது தலைவர்கள் நிதானமாக யோசிக்கட்டும். தமிழ் மக்களைப் பொறுத்தவரை மிக மோசமான பாதிப்புகளை விளைவித்த காலம் ஐக்கிய தேசியக் கட்சி யுகம் என்பது நாமனைவரும் அறிந்த உண்மை.
கறுப்பு ஜூலை கலவரத்தைக் கட்டவிழ்த்துவிட்டு பார்வையாளராக இருந்தமை, இனங்களிடையே வன்முறைகளைத் தூண்டிவிட்டு பார்த்திருந்தமை, தமிழ் இளைஞர்களின் கண்களைத் தோண்டி அராஜகம் செய்தமை, 1990 களில் கொளக்கொட்டியாவை அனுப்பி பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களையும் தமிழர் பிரதேசங்களையும் கபளீகரம் செய்தமை உள்ளிட்ட பல அட்டுழியங்கள் நடந்தேறியது இந்த ஐக்கிய தேசியக் கட்சி யுகத்திலே தான்.
1951 களில் சமஸ்டியை தரபுறப்பட்டவர் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க. அப்போது பாதயாத்திரை செய்து பண்டா, செல்வா ஒப்பந்தத்தை கிழித்தெறிந்தவர் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன.
தமிழர்களின் சாத்வீகப் போராட்டத்தை அடக்கியவர் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச. அவரின் மகனே இன்று மறுவடிவம் தாங்கிவருகிறார்.
இதுவரை சிறுபான்மையினரை பாதுகாப்போம் என்று ஒருவார்த்தையாவது அவர் சொன்னாரா? இல்லை. கோத்தா ஆவது சொன்னார். தமிழர் தப்பிப்பிழைக்க வேண்டுமானால் இந்த சமகால ஆட்சியை மாற்றியமைக்க வேண்டும்.
எனவே எனது பூரண ஆதரவு கோட்டாபாயவுக்கே. தமிழ் மக்களும் அதனையே தெரிவு செய்ய வேண்டும். இல்லாவிடில் இருண்ட யுகத்திற்கு செல்ல வேண்டி நேரிடும் என்றார்.
காரைதீவு குறூப் நிருபர்
No comments:
Post a Comment