ஐரோப்பிய தேர்தல் கண்காணிப்புக் குழுவுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செய்துள்ள முறைப்பாடு நூறு வீதம் உண்மைக்குப் புறம்பானதெனத் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார். தேர்தல் பிரசார மேடைகளிலும் ஊடகங்கள் வாயிலாகவும், எம்மை விமர்சிப்பது மிகவும் கண்டிக்கத்தக்கதென்றும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் கட்சியின் அலுவலகத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்த அவர், அங்கு கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் பலவற்றிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் உட்பட உறுப்பினர்கள் பலர் குறிப்பாக சிவநேசத்துரை சந்திரகாந்தனையும், எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியையும் மிக மோசமாகச் சாடிவருவதும், வருகின்ற தேர்தலில் முன்னாள் போராளிகளுடாக குழப்பத்தை ஏற்படுத்த முனைவதாகவும், வாக்கு மோசடியில் ஈடுபட்டிருப்பதாகவும் ஐரோப்பிய தேர்தல் கண்காணிப்பு குழுவுக்கு முறைப்பாடு செய்திருப்பதாக அறிகிறோம்.
இதனை எமது கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது. எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆயுதம் ஏந்திப்போராடிய கட்சி. ஆனால், 2008ஆம் ஆண்டின் பின்னர் ஜனநாயகப் பாதைக்குத் திரும்பி ஜனநாயக ரீதியாக அரசியல் கட்சியாகப்பதிவு செய்யப்பட்டு கிழக்கு மாகாணத்தில் எமது தலைவர் சந்திரகாந்தனின் தலைமையின் கீழ் பாரிய அபிவிருத்திப் பணிகளை செய்துவரும் கட்சியாகும்.
நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் தலைமைகளை ஏமாற்றி 11 ஆசனங்களை வைத்திருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் 07 ஆசனங்கள் வைத்திருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறு கபடநாடகமாடி முதலமைச்சரைப் பெற்றுக்கொண்டு கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்புக்களை இல்லாமல் செய்வதற்கு முயற்சித்த செயற்பாட்டை தலைவர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் 2008 தொடக்கம் 2012 வரை நடத்திய இணக்க ஆட்சி சமத்துவமான ஆட்சியின் வெளிப்பாடு மீண்டும் வந்துவிடுமோ? என்ற நிலைமையிலேயே இவ்வாறு கூறி வருகின்றனர்.
முஸ்லிம் காங்கிரஸ் தோல்விகளுக்கான காரணங்களை சாக்குபோக்குகளை இப்பொழுதே தேடுகின்ற நிலைப்பாடுதான் சந்திரகாந்தன் மீதும் தமிழ் மக்கள் கட்சியின் மீதும் ஐரோப்பிய தேர்தல் கண்கானிப்பு குழுவிற்கு செய்துள்ள முறைப்பாடு வெளிப்படுத்தி நிற்கின்றது.
இது தொடர்பாக நாமும் எமது சார்பாக தேர்தல் கண்காணிப்புக் குழுவுக்கு பதில் கடிதத்தை அனுப்பியுள்ளோம். இது தொடர்பாக நேரடியாக விளக்கம் கொடுக்கவிருக்கின்றோம் எனவும் பிரசாந்தன் தெரிவித்தார்.
வெல்லாவெளி நிருபர்
No comments:
Post a Comment