கடந்த நான்கரை ஆண்டுகளில் நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக பலர் பாரிய அர்ப்பணிப்புளை செய்ததாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அவர்கள் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள தகுதியுடையவர்கள் என்பதோடு அவர்களுக்கு கட்டாயம் பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (27) இடம்பெற்ற பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் பதவி பிரமாண நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
தொடர்ந்தும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர் அரசியல் யாப்புக்கு உட்பட்டு அவ்வாறானவர்களில் சிலரை தெரிவுசெய்து சிரேஸ்ட மற்றும் புதிய அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
அதற்கமைய பல புதிய முகங்கள் அமைச்சு பதவிகளை வகிப்பதை கண்டுகொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தாம் எந்தவொரு அமைச்சு பதவியினையும் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கவில்லை எனவும் தெரிவித்தார்.
கட்சி தமக்கு பல பொறுப்புகளை வழங்கியுள்ளதாகவும் அதற்கமைய அவற்றை நிறைவேற்ற எதிர்காலத்தில் கடமைப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று நிலையான அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த முழுமூச்சுடன் செயற்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதன்போது தொடர்ந்தும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர் அரசாங்கம் என்ற வகையில் போலியாக நடிக்காமல் சட்டத்தை முறையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
எனவே சட்டத்தை நடைமுறைப்படுத்த மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் மற்றும் நிதி குற்றவியல் விசாரணை பிரிவு உள்ளிட்ட நிறுவனங்களை அமைக்க அவசியம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களே அதற்கு போதுமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கம் எந்த வகையிலும் அரசியல் பழிவாங்கள் செயற்பாடுகளை முன்னெடுக்காது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment