மண்மேடு சரிந்ததில் தாய், தந்தை, மகள் பலி - மகனின் சடலத்தை தேடி மீட்புப் பணி தொடர்கிறது - News View

About Us

About Us

Breaking

Saturday, November 30, 2019

மண்மேடு சரிந்ததில் தாய், தந்தை, மகள் பலி - மகனின் சடலத்தை தேடி மீட்புப் பணி தொடர்கிறது

நேற்று இரவு வலப்பனை, மலபத்தாவ பிரதேசத்தில் வீட்டொன்றில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் காணாமல் போன நால்வரில் மூவரினது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் பெய்துவந்த கனமழை காரணமாக, நேற்று (30) இரவு குறித்த வீட்டில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. இதன்போது வீட்டிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மற்றும் அவர்களது இரு பிள்ளைகள் மண்ணிற்குள் புதையுண்டு, காணாமல் போயுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பிரதேசவாசிகள், பொலிஸார் மற்றும் மீட்புக் குழுவினர் இணைந்து மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையில் இன்று (01) காலை, தாய், தந்தை, மற்றும் அவர்களது மகள் ஆகியோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

17 வயதான அவர்களது மகனின் உடலை தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, தற்போது நாடு முழுவதும் பெய்து வரும் அடைமழை காரணமாக, இரத்தினபுரி, பதுளை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகங்களுக்கு நிலச்சரிவு அபாய எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

(படம்: பதுளை விசேட நிருபர் - எம். செல்வராஜா)

No comments:

Post a Comment