பலாலி விமான நிலையம் அமைந்துள்ள அந்தக் காணியின் உரிமையாளர்களுக்கு வேறு இடம் வழங்கப்பட வேண்டும் அல்லது அவர்களுக்கான நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும் என முன்னாள் இரானுவத் தளபதியும் ஐனாதிபதி வேட்பாளருமான ஜெனரல் மகேஷ் சேனநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
தேர்தல் பிரசாரதிற்காக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள அவர், நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த பல வருடங்களாக நான் இராணுவத்தில் இருந்திருக்கின்றேன். இராணுவத்தில் இருந்து நாட்டுக்கும் மக்களுக்கும் சேவையாற்றியிருக்கிறேன். இப்போது தேர்தலில் போட்டியிட்டு நாட்டுக்கு இன்னும் சேவை செய்யவே நான் வந்திருக்கின்றேன்.
நாட்டு மக்கள் அரசியல்வாதிகளால் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கிறார்கள், குறிப்பாக சிங்களவர், தமிழர், முஸ்லிம் என இன ரீதியாகவும் அதேநேரம் இந்து, பௌத்தம், இஸ்லாம் என மத ரீதியா ஆட்சியார்களால் பகுக்கப்பட்டு பல பிரிவுகள் காணப்படுகிறது.
இந்த நாட்டில் ஆரம்ப காலத்திலிருந்து ஏற்படுத்தப்பட்ட பிரிவுகள்தான் யுத்தத்திற்கு நாட்டை இட்டுச்சென்றது. இதனாலேயே கடந்த 30 வருடமாக நாட்டில் யுத்தமும் நடைபெற்றது. இதனால் தமிழர் சிங்களவர் என இரண்டு பக்கத்திலுள்ளவர்களுக்கும் போராட்டமாகவே வாழ்க்கை அமைந்தது.
ஆகவே இந்தப் பிரிவினைகளிலிருந்த விடுபட்டு வடக்கு தெற்குக்கு இடையில் பாலம் அமைத்து அனைவரும் ஒன்றாக வாழ்வதற்குரிய நடவடிக்கைகளை ஏனையவர்களை விட என்னால் சிறப்பாக செய்ய முடியும். ஏனெனில் கடமையிலிருந்த காலத்தில் நாங்கள் என்ன செய்தோம் என்பது மக்களுக்கு நன்கு தெரியும்.
தற்போது வடக்கில் 92 வீதமான அரச காணிகளும், 80 வீதமான தனியார் காணிகளும் விடுவிக்கப்பட்டன. ஆனாலும் தற்பொழுது 3000 ஆயிரம் ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படாமல் உள்ளன. அது இராணுவ முகாமோடு சுற்றியுள்ள பிரதேசதம்.
அந்தப் பிரதேசத்திற்குள்தான் பலாலி விமான நிலையம் அமைந்து காணப்படுகிறது. அதனால் அதை விடுவிப்பதில் சிக்கல் உள்ளது. ஆகவே அந்தக் காணியின் உரிமையாளர்களுக்கு வேறு இடம் வழங்கப்பட வேண்டும். அல்லது நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும்” என வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment