ஜனாதிபதி தேர்தலுக்கான முதலாவது தபால் மூல வாக்களிப்பு நேற்றைய தினம் நடைபெற்றபோது ஒரு வாக்களிப்பு நிலையத்தில் முறைகேடு நடந்திருப்பதாக தனக்கு தகவல் கிடைத்திருப்பதாகவும் இந்த முறைகேட்டுக்கு அதிகாரி ஒருவரும் தொடர்புபட்டிருப்பதாக அறியவருவதாகவும் தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இது தொடர்பில் விசாரணை முடுக்கிவிடப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
விசாரணையின் மூலம் குற்றம் நிருபிக்கப்பட்டால் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டு மூன்று வருட கால சிறைத் தண்டனைக்காளாகும் நிலை ஏற்படுமெனவும் ஆணைக்குழுத் தலைவர் கூறினார்.
நேற்று வியாழக்கிழமை தேர்தல் செயலகத்தில் நடைபெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் கூறுகையில், நேற்று நாடு முழவதும் தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்றது. வாக்களிப்பு ஆரம்பமான சில மணி நேரத்துக்கிடையில் ஒரு அரச ஊழியர் தான் வாக்களிப்பதை தொலைபேசி மூலம் படமெடுத்து பகிரங்கப்படுத்தியுள்ளதாக அறிந்தேன்.
உடனடியாக அந்த ஊழியரின் செயற்பாடு தொடர்பில் விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். அதே சமயம் அந்த ஊழியர் அவ்வாறு நடப்பதற்கு வாக்களிப்பு நிலைய அதிகாரி ஒருவர் உடந்தையாக இருந்தாரா என்பது குறித்தும் விசாரித்தறியுமாறு பணித்துள்ளேன்.
ஜனாதிபதி தேர்தல் விதிகளை மீறுவோர் மீது கடுமையாக நடந்துகொள்ளவுள்ளேன். தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும்போது அவற்றை இலத்திரணியல் ஊடகங்கள் நேரடி ஒலி, ஒளிபரப்புச் செய்வது தப்பல்ல. ஆனால் முறைகேடுகள் இடம்பெறாத வகையில் நடந்துகொள்ள வேண்டும்.
தபால் மூல வாக்களிப்பு இன்று முதலாம் திகதியும், மீண்டும் ஐந்தாம் திகதியும் இடம்பெறும். அதே சமயம் தபால் மூல வாக்குகள் எண்ணுவதிலும் நேர மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. நவம்பர் 16 இல் இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிப்பு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இடம்பெறுவதால் வாக்களிப்பு முடிந்தவுடன் மாலை 5.15 மணியளவில் தபால் மூல வாக்குகள் எண்ணப்படும். இரவு வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.
தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் 17ஆம் திகதி நண்பலாகும் போது வெளியிட முடியும் என நம்புகின்றேன். ஆனால் சிலவேளை வேட்பாளர்கள் வெற்றி பெறக்கூடிய வாக்கு வீதத்தை பெறாது விட்டால் இரண்டாவது விருப்பத் தெரிவு வாக்குகளை எண்ண வேண்டி வரலாம். அப்படி நடக்கும்போது அதற்காக எட்டு மணி நேரமாவது பயன்படலாம். அது நடக்குமானால் 18 ஆம் திகதி நண்பகலுக்கு முன்னர் முழுமையான முடிவு வெளியிடப்படும் என்றார்.
எம்.ஏ.எம். நிலாம்
No comments:
Post a Comment