ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக பட்டதாரிகள் எச்சரிக்கை! - News View

About Us

About Us

Breaking

Saturday, September 21, 2019

ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக பட்டதாரிகள் எச்சரிக்கை!

ஜனாதிபதித் தேர்தலில் வாக்குகளை அளிக்காது புறக்கணிக்கப் போவதாக தெரிவித்து வேலையில்லா பட்டதாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலையில்லா பட்டதாரிகள் நியமனம் தொடர்பாக போராடிவரும் நிலையில் அவர்களுக்கு நியமனம் தொடர்பாக தீர்வு கிடைக்கப் பெறாத நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்குகளை அளிக்காது புறக்கணிக்க போவதாக பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நேற்று (சனிக்கிழமை) காலை வேலையில்லா பட்டதாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதில் நூற்றுக்கணக்கான வேலையில்லா பட்டதாரிகளும் அவர்களுடைய பெற்றோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது “அரச நியமனம் கோரி கடந்த 2015 ஆம் ஆண்டு தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உண்ணாவிரதம் மற்றும் வீதியோரப் போராட்டங்களை மேற்கொண்டுவந்த போதும் இதுவரைக்கும் எமக்கு ஒழுங்கான நியமனங்கள் கிடைக்கவில்லை.
தொடர்ந்தும் கல்வியை முடித்து பட்டதாரிகள் வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு அந்தந்த ஆண்டு நியமனங்களை வழங்கியிருந்தால் இவ்வாறு வேலையில்லா பட்டதாரிகள் அதிகரித்திருக்க முடியாது.

அரசாங்கம் எமக்கு நியமனங்கள் வழங்காது ஏமாற்றிவருகின்றது எனவே எமக்கு நியமனம் வழங்காவிட்டால் நாங்களும் எமது உறவுகளும் இந்த வருடம் நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்காது புறக்கணிக்கவுள்ளோம் என அகில இலங்கை ரீதியாக வேலையில்லா பட்டதாரிகள் தீர்மானம் எடுத்துள்ளோம்” என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வாக்களிப்பு புறக்கணிப்பு மூலம் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் ஜனாதிபதித் தேர்தலில் அளிக்கப்படாது எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும் இதன் முதற்கட்டமாக தேர்தல் ஆணையகத்திற்கு தபால் அட்டைகளை அனுப்பவுள்ளதாகவும், ஆகவே எமக்கான தீர்வினை உடனடியாக அரசு பெற்றுத்தரவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment