பாராளுமன்றம் கலைப்பு விடயம் - பாராளுமன்றமே முடிவெடுக்க வேண்டும் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 4, 2019

பாராளுமன்றம் கலைப்பு விடயம் - பாராளுமன்றமே முடிவெடுக்க வேண்டும்

ஜனாதிபதித் தேர்தல் முடிந்தவுடன் பாராளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பில் பாராளுமன்றமே முடிவெடுக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவிருப்பதாலேயே 2020ஆம் ஆண்டுக்கான முழுமையான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்காது முதல் காலாண்டுக்கான கணக்குவாக்கறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதனால் அரசாங்க நிதி எந்த விதத்திலும் மோசடியாகப் பயன்படுத்தப்படாது எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

பிரதமர் கேள்வி நேரத்தில் ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே இதனை கூறினார்.

2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை சமர்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றதா? அவ்வாறு இல்லையென்றால் கணக்குவாக்கறிக்கையை சமர்பிப்பதற்கு திட்டம் இருக்கின்றதா?

அத்துடன் இடைக்கால கணக்கு அறிக்கையை சமர்பிப்பதன் மூலம் அரசாங்கத்தின் வருமானம் இல்லாது போகும் என்பதுடன் சரியாக செலவு தொகையை ஒதுக்காமையினால் அரச நிதி முறையற்ற வகையில் பயன்படுத்தப்படுவதற்கு இடமளிக்கப்படும் என்பதனை அறிவீர்களா? என பிமல் ரத்னாயக்க வினவியிருந்தார்.

அத்துடன், பொதுத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அமைக்கப்படும் புதிய அரசாங்கத்தினாலும் 2020 ஏப்ரல் 30ஆம் திகதிக்கு முன்னர் வரவு செலவு திட்டத்தை சமர்பிக்க முடியாது போகும் என்பதுடன் அந்த வருடத்தின் இரண்டாவது காலாண்டிலும் மேலும் இடைக்கால கணக்கு அறிக்கையை கொண்டு வரும் நிலைமை ஏற்படும்.

இதனால் அரச நிதி முறையற்ற வகையில் பயன்படுத்தும் நிலைமை ஏற்படும் என்பதுடன் பொருளாதார வீழ்ச்சி நிலைமை ஏற்படும் என்பதனை ஏற்றுக்கொள்கின்றீர்களா என்றும் தனது கேள்வியில் கேட்டிருந்தார்.

இதற்குப் பதிலளித்த பிரதமர், 2019ஆம் ஆண்டு இறுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவிருப்பதால் 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்காது, கணக்கு வாக்கறிக்கையை சமர்ப்பிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இதனால் அரசாங்க நிதி எந்த விதத்திலும் தவறான முறையில் பயன்படுத்தப்படாது. கணக்குவாக்கறிக்கைக்கு அமைய ஒதுக்கப்படும் நிதியை அரச சுற்றுநிருபங்களுக்கு அமையவே பயன்படுத்த முடியும்.

1988ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த உடனேயே பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டது. 1999ஆம் ஆண்டிலும் ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த பின்னர் வரவு செலவு திட்டத்தை சமர்பித்த பின்னரே பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டது.

அந்த காலப்பகுதியில் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் இருந்தன. ஆனால் இப்போது அந்த அதிகாரங்கள் பாராளுமன்றத்திடமே இருக்கின்றது. முன்கூட்டியே பாராளுமன்றத்தை கலைக்க வேண்டும் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

No comments:

Post a Comment