கல்முனை மாநகர முதல்வர், சபை உறுப்பினர்களே..! - என்று தீரும் இந்த அவலம்..!! - News View

About Us

About Us

Breaking

Thursday, September 5, 2019

கல்முனை மாநகர முதல்வர், சபை உறுப்பினர்களே..! - என்று தீரும் இந்த அவலம்..!!

முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் முயற்சியால் சுனாமி கடல்கோள் அனர்த்தத்தின் பின்னர் உருவாக்கப்பட்ட கல்முனை கடற்கரை வீதியில் அமைந்துள்ள விளையாட்டு மைதானம் இன்று ஏதோ குறைமாத பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு ஒப்பான நிலையில் நலிவடைந்து காணப்படுவது மைதானத்தை பயன்படுத்தும் அனைத்து வகையான விளையாட்டு வீரர்கள் நலன்விரும்பிகள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தி நிற்கின்றது.

மைதான அபிவிருத்தி என்ற பேரில் அரசாங்கத்தினால் கிடைக்கப்பெற்ற பல மில்லியன் நிதியுதவிகள் மூலம் அபிவிருத்தி வேலைத் திட்டங்களை பலர் மேற்கொண்ட போதிலும் ஒன்றும் இதுவரையில் பூரணப்படுத்தப்படாமல் அரைகுறை நிலையில் மைதானத்தை பயன்படுத்தும் இளைஞ்சர்களை நோயாளிகளாக தினம்தோறும் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கும் பெருமை இந்த மைதானத்துக்கு உண்டு என்று சொல்வதில் மனவேதனை அடைகின்றேன்.

விளையாட்டு மைதானத்திற்கு அறவே பொருத்தமில்லா கிறவல் இங்கு கொட்டப்பட்டுள்ளதால் கொஞ்சம் மழை பெய்தாலும் சதுப்பு நிலம் போல குன்றும் குழியுமாக காட்சி அளிக்கின்றதை விளையாட்டை நேசிக்கும் எவராலும் பார்க்கவே சகிக்க முடிவதில்லை.
கடந்த மாநகர சபை தேர்தல் கால பிரச்சாரக் கூட்டங்களில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் மின்னொளி விளையாட்டு மைதானமாக இதை மாற்றி அமைப்பதாக வாக்குறுதி அளித்து அதன் மூலம் கிடைக்கப்பெற்ற 6 மில்லியன் ரூபாய் திரும்பிப்போனது கறுப்பு வரலாறு.

கல்முனை மாநகர சபையின் ஆளுகையின் கீழ் உள்ள இந்த மைதானம் தற்போதைய நிலையில் குப்பை கூளங்கள் கொட்டும் இடமாக மாறிவருவது மிகவும் வேதனை பயக்கின்றது.

இந்த விளையாட்டு மைதானத்தில் அமையப் பெற்றுள்ள நிகழ்வு மேடையானது இதுவரை எவராலும் பாவிக்கப்படாமலும் அதில் பொருத்தப்பட்டுள்ள சில்வர் கம்பிகள் அனைத்தும் துருப்பிடித்து கழன்று விலுந்துள்ள நிலையில் பார்க்கும் அனைவரையும் வேதனையில் ஆழ்த்துகிறது. 
மாநகர முதல்வர் மற்றும் மாநகர சபை உறுப்பினர்களே..!

தயவு கூர்ந்து இந்த மைதானத்தின் தற்போதைய நிலை தொடர்பாக கவனம் செலுத்தி இங்கு நிலவும் குறைகளை சீர் செய்து எமக்கு உதவ முன் வரவேண்டும் என்பது இந்த மைதானத்தை பயன்படுத்தும் விளையாட்டுக் கழகங்கள் சார்பான வினயமான வேண்டுகோளாகும். 

ஏனெனில் சிறந்த அற்பணிப்பு மிக்க எதிர்கால சமூக உருவாக்கத்திற்கு விளையாட்டும் அதற்கான மைதானமும் மிகவும் அவசியம் தாங்கள் இந்த மைதானத்தை சீர் செய்யும் பொழுது எதிர்கால சமூகம் உங்களின் அர்பணிப்பு மிக்க விளையாட்டுத்துறைக்கான உயரிய பங்களிப்பாக இதை கருதும் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மையாகும்.

கல்முனை நிருபர்

No comments:

Post a Comment