முல்லைத்தீவு மாவட்டத்தில் முப்படைகள், சிவில் பாதுகாப்பு திணைக்களம், பொலிஸார் மற்றும் அரச திணைக்களங்களின் அபகரிக்கப்பட்ட காணிகள் தொடர்பில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா முல்லைத்தீவு மாவட்ட மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விடயம் குறித்து மேலும் தெரிய வருகையில், ஜனாதிபதியின் தலைமையில் 2019.08.27 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக முப்படைகள், சிவில் பாதுகாப்பு திணைக்களம், பொலிஸார் மற்றும் அரச திணைக்களங்களின் {வன பாதுகாப்பு திணைக்களம் வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தொல்பொருளியல் திணைக்களம் மகாவலி அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றின்} கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணிகளை மற்றும் பொதுத் தேவைகளுக்கான காணிகளை விடுவிப்பதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று வடக்கு மாகாண ஆளுநர் அவர்களுடைய தலைமையில் எதிர்வரும் 12 ஆம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மேலே குறிப்பிடப்பட்ட முப்படைகள் திணைக்களங்களால் பதிக்கப்பட்டுள்ள மக்களுடைய காணிகள் மற்றும் பொதுத் தேவைகளுக்கான காணிகளின் விவரங்களை வடக்கு மாகாண ஆளுநர் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசாவிடம் கோரியுள்ளார்.
இதன் அடிப்படையில் அந்த தகவல்களை வழங்கும் முகமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளிலும் முப்படைகள் சிவில் பாதுகாப்பு திணைக்களம் பொலிஸார் மற்றும் அரச திணைக்களங்களான வனப்பாதுகாப்பு திணைக்களம் வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தொல்லியல் திணைக்களம் மகாவலி அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றின் கீழ் அபகரிக்கப்பட்டு உள்ள காணிகள் தொடர்பான விவரங்களை அந்தந்த பிரதேச செயலகங்களில் பதிவு செய்யுமாறு பாதிக்கப்பட்ட மக்களிடம் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா கேட்டுக் கொண்டுள்ளார்.
குறித்த பதிவுகளை 10 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்க வேண்டி இருப்பதனால் 9 ஆம் திகதிக்கு முன்பதாக பதிவுகளை மேற்கொள்ளுமாறும் மேலும் அவர் அறிவித்திருக்கிறார்.
(முல்லைத்தீவு நிருபர் தவசீலன்)
No comments:
Post a Comment