தேசிய தலைவர்கள் எனக் கூறி கொள்வோர் தென்னிலங்கை சிங்கள மக்களைத் தவறாக வழி நடத்தி வருவதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் தெரிவித்தார்.
சோனக இஸ்லாமிய கலாசார நிலையத்தின் 75ஆவது ஆண்டு நிறைவையொட்டிய அதன் பவள விழா நிகழ்வில் அதிதிகளில் ஒருவராக கலந்துகொண்டு உரையாற்றும் பொழுதே அவர் இதனைக் கூறினார்.
இந்த நிகழ்வு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் புதன்கிழமை (04) நடைபெற்றபோது சேர் ராசிக் பரீட்டின் பாராளுமன்ற உரைகள் அடங்கிய நூலொன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இதில் சபாநாயகர் கரு ஜயசூரிய பிரதம அதிதியாகவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன ஆகியோர் அதிதிகளாகவும் கலந்து கொண்டு உரையாற்றினர். சோனக இஸ்லாமிய கலாசார நிலைய தலைவர் ஓமர் காமில் நிகழ்வுக்கு தலைமை தாங்கினார்.
இவ்விழாவில் தொடர்ந்து உரையாற்றிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கூறியதாவது சிறுபான்மைச் சமூகங்களைத் தொடர்ந்து புறக்கணிப்பதன் மூலம் நாட்டை மீண்டும் அழிவுக்குள் தள்ளிவிடும் அச்சுறுத்தலே காணப்படுகிறது.
போலித்தனமான தேசியவாதிகளால் நாடு பேராபத்துக்குள்ளே தள்ளப்படும். சுதந்திரமடைந்து 70 வருடங்களைக் கடந்த நிலையிலும் சிறுபான்மைச் சமூகங்களுக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்க தேசிய அரசியல் கட்சிகள் தவறிவிட்டன.
தென்னிலங்கையின் தேசியத் தலைவர்கள் எனக் கூறிக்கொள்வோர், பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவை தமது சுயநல அரசியலுக்காக பெற்றுக்கொள்வதிலே குறியாக இருக்கின்றனர்.
தங்களை தேசியவாதிகள் எனக் கொள்பவர்கள் பக்கச்சார்பாகவும், சிறுபான்மைச் சமூகங்களை ஏமாற்றுபவர்களாகவுமே செயற்படுகின்றனர். நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளைக் கடந்துள்ளது.
எம்.ஏ.எம். நிலாம்
No comments:
Post a Comment