திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஆனமாலு ரங்கா என்பவர் உள்ளிட்ட இருவரின் கொலை தொடர்பில் ‘குடு ரொஷான்’ உள்ளிட்ட 7 பேர் இன்று (05) அதிகாலை யக்கலவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தக் கொலைச் சம்பவங்கள் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 8 பேரும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு மேலதிகமாக இன்று அதிகாலை சந்தேகத்தின் அடிப்படையில் ‘குடு ரொஷான்’ உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கம்பஹா பிரதேச சபை உறுப்பினரான தொன் ஷாமால் சிந்தக, போதைப் பொருள் கடத்தல்காரரான ‘குடு ரொஷான்’ என அழைக்கப்படும் பிரசாத் துவான், குடு ரொஷானின் சகோதரரான ரந்தெவ், துஷார மதுரங்க பெரேரா, தினேஷ் ரங்க, சுரனிமல ரொஷான் டயஸ் மற்றும் மொஹம்மட் ஹாரிஸ் மொஹம்மட் ஹூசைன் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப் பொருள் கடத்தல்காரரான ‘குடு ரொஷான்’ கைது செய்யப்படும்போது 5 கிராம் நிறையுடைய ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறியுள்ளார்.
சந்தேகநபர்கள் கொழும்பு - புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.
No comments:
Post a Comment