உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் விசாரணையின் நிமித்தம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (25-08-2019) கைது செய்யப்பட்டிருப்பதாக அறியக்கிடைக்கின்றது. இந்நிகழ்வானது மனதளவில் அதிர்ச்சியளிக்கும் ஒரு விடயமாக இது அமைந்திருக்கின்றபோதிலும் இன்னுமொரு புறத்தில் எம்மை ஆழமாக சிந்திக்கவும் வைத்திருக்கின்றது என வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களின் உண்மையான சூத்திரதாரிகளை இதுவரை இலங்கை அரசாங்கம் நெருங்கவுமில்லை அல்லது அவர்களை நெருங்கப்போவதுமில்லை இவ்வளவு பெருந்தொகையான வெடிமருந்துகளை பயங்கரவாதிகளுக்கு விநியோகித்தவர்கள் தொடர்பில் இலங்கையின் புலனாய்வுத்துறை கவனம் செலுத்தியதாக ஒரு தகவலும் கிடையாது ஆனால் நல்லிணக்கம், சமூக அமைதி குறித்துப்பேசியவர்களை இலக்குவைத்து வேட்டைகள் தொடர்கின்றன.
இக்குண்டுத் தாக்குதல்களைக் காரணமாக வைத்து இலங்கை முஸ்லிம் சமூகத்தின் சிந்தனைத் தளங்களை இலக்கு வைத்து அவர்களை வேட்டையாடி அதன் மூலம் இலங்கை முஸ்லிம் சமூகத்தைப் பலவீனப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளிலும் இலங்கை அரசு மிக மும்முரமாக தன்னை ஈடுபடுத்தி வருகின்றது என்பதற்கான ஒரு குறியீடே இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் முன்னையநாள் அமீர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களின் கைதாகும்.
இதற்கு முன்னரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவரிடத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. இப்போது அவற்றையும் தாண்டி அவரைக் கைது செய்திருக்கின்றார்கள். இது இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் இடம்பெறும் ஒரு நிகழ்வாகக் காட்டப்படுகின்றது. உண்மையில் இது அவ்வாறானதல்ல, இலங்கை முஸ்லிம் புத்திஜீவிகளை இலக்கு வைத்து நகர்த்தப்படும் மிகமோசமான அடக்கு முறையே இதுவாகும். இது மிகப்பாரிய ஒரு மனித உரிமை மீறல் மற்றும் அச்சுறுத்தல் நடவடிக்கையாகும்.
இதனை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கவோ அங்கீகரிக்கவோ முடியாது. அவரது கைதுக்கெதிராகவும், முஸ்லிம் புத்திஜீவிகள் மீதான அடக்குமுறைகளுக்கெதிராகவும் மிகப்பாரிய எதிர்வினையாற்ற வேண்டியது அனைத்து மனித உரிமை ஆர்வலர்கள், அடக்கு முறைகளுக்கெதிரான செயற்பாட்டாளர்களினதும் உடனடிக் கடமையாகவும் பொறுப்பாகவும் மாறியிருக்கின்றது. இதுவிடயமாக சர்வதேச அளவிலே அழுத்தங்கள் பிரயோகிக்கப்படவும், நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதும் அவசியமாகும் என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment