கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் அமைச்சர் றவூப் ஹக்கீமுடன் வாழைச்சேனை பிரதிநிதிகள் சந்திப்பு - மிக விரைவில் காணி அதிகாரம் - News View

About Us

About Us

Breaking

Thursday, August 22, 2019

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் அமைச்சர் றவூப் ஹக்கீமுடன் வாழைச்சேனை பிரதிநிதிகள் சந்திப்பு - மிக விரைவில் காணி அதிகாரம்

ஆதிப் அஹமட்
மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகின்ற கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்துக்கான பூரண அதிகார அமுலாக்கங்களை பெற்றுக்கொள்வது சம்பந்தமான கலந்துரையாடலொன்று இன்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் காரியாலயத்தில் இடம்பெற்றது.

நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சின் இணைப்புச் செயலாளர் யு.எல்.எம்.என்.முபீனின் ஏற்பாட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான றவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பிரதிநிதிகள், ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் மற்றும் ஓட்டமாவடி, வாழைச்சேனை பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான செய்யித் அலி ஸாஹிர் மௌலானா, சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், பைஸல் காஸிம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான நஸீர், தெளபீக் ஆகியோர் கலந்துகொண்டனர்.
1999ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட பணம்பலன எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் காணித் தேவையினை முஸ்லிம் பிரதிநிதிகள் முன்வைத்ததற்கமைய மாவட்ட முஸ்லிம் மக்களின் காணித் தேவையினை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகமானது 240 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பை கொண்டதாக உருவாக்கப்பட பரிந்துரை செய்யப்பட்டது.

இதேவேளை ஆணைக்குழு ஊடாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களின் கோரிக்கைக்கு அமைய கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகமும் பரிந்துரைக்கப்பட்டது. இதற்கான அங்கீகாரமும் அப்போதைய அமைச்சரவையில் 2000ஆம் ஆண்டு பெற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.

எனினும் மட்டக்களப்பு கச்சேரியின் அநீதியான செயற்பாட்டின் காரணாமாக குறித்த கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்துக்குரிய காணி அதிகாரங்கள் உள்ளிட்ட ஏனைய அதிகாரங்கள் இன்றுவரை தடை செய்யப்பட்டே வருகின்றது. வேண்டுமென்றே இழுத்தடிப்பு செய்யப்பட்டு இன்றுவரை இப்பிரதேச செயலகத்துக்குரிய காணி அளவை செய்யப்பட்டு வர்த்தமானி அறிவித்தலும் பிரசுரிக்கப்படவில்லை.
இவ்விடயம் தொடர்பில் மாவட்ட ரீதியாக தொடர்ந்து செயற்பட்டு வருகின்ற பிரதிநிதிகள் தற்போது நிலவுகின்ற அரசியல் சூழ்நிலையினை சாதகமாக கொண்டு இப்பிரதேச செயலகத்துக்கான முழுமையான அதிகாரங்களை பெற்றுத்தர வேண்டுமென இக்கலந்துரையாடலின் போது அமைச்சர் றவூப் ஹக்கீமிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதன்போது விளக்கமளித்த அமைச்சர் றவூப் ஹக்கீம், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக விவகாரம் தொடர்பாக இதுவரை தான் மேற்கொண்ட விடயங்களை விளக்கியதோடு கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பிலான தீர்வை பெற்றுக்கொள்ள முயற்சிகள் மேற்கொண்டு வருகின்ற இதே சந்தர்ப்பத்தில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்கான அதிகாரங்களையும் பெற்றுக்கொள்ள முழுமையான முயற்சிகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

மேலும், இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன உள்ளிட்ட பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடுவதாகவும் அதன் பின்னர் பிரதமரோடும் இது தொடர்பிலான விடையங்களை கலந்துரையாடுவதுடன் இது தொடர்பான நடவடிக்கைகளை தான் தொடராக மேற்கொள்வதாக வாக்குறுதியளித்ததோடு அத்துடன், மேலதிக கலந்துரையாடல் ஒன்றை மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment