காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை யாழில் திறக்க எடுக்கும் முயற்சி அப்பட்டமான ஒரு நாடகம் - News View

About Us

About Us

Breaking

Friday, August 23, 2019

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை யாழில் திறக்க எடுக்கும் முயற்சி அப்பட்டமான ஒரு நாடகம்

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை யாழில் திறக்க எடுக்கும் முயற்சி அப்பட்டமான ஒரு நாடகம் என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை யாழில் திறப்பதற்கான நடவடிக்கைகளை ஓ.எம்.பி அலுவலகம் மேற்கொண்டு வருகின்றது.

இந்த நிலையில் இதற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வடகிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த அமைப்புக்கள் கடும் கண்டணத்தை தெரிவித்து வருகின்றன. 

இவ்வாறான சந்தர்ப்பத்தில் அறிக்கை ஒன்றை விடுத்து தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி. விக்னேஸ்வரன் இதனை கண்டித்துள்ளார். 

ஓ.எம்.பி அலுவலகத்தால் இதுவரை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு எந்தவிதமான பயனும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ள அவர், தற்போது யாழில் அதன் அலுவலகத்தை திறக்க எடுக்கும் முயற்சி வெறும் கண் துடைப்பு எனவும் அவர் சாடியுள்ளார். 

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் கடந்த கால செயற்பாடுகளைப் பார்க்கின்ற போது தெளிவான எந்த இலக்குகளோ, கால அட்டவணையோ இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். 

இந்த அலுவலகத்துக்கு முறையிடப்படாத ஏராளமான காணாமல் போன சம்பவங்கள் இருப்பதாகவும், ஆனால், அவை தொடர்பில் இந்த அலுவலகம் கரிசனை கொண்டிருப்பதாகத் தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார். 

வெறுமனே கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் அடிப்படையில் அல்லாமல், எத்தனை பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிவதற்கான உண்மையான தரவுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை எனவும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். 

அதேபோல காணாமல் போன உறவினர்கள் தொடர்பில் முறைப்பாடுகளைச் செய்வதற்கு புலம்பெயர்ந்து வாழும் மக்களுடன் தொடர்பு கொள்ள உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக தெரியவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். 

எனவே, சர்வதேச நாடுகளையும் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவையும் ஏமாற்றும் வகையில் இந்த அலுவலகம் திறக்கப்படவுள்ளதாகவும், மொத்தத்தில் இது ஒரு கண்துடைப்பு எனவும் அவர் விமர்சித்துள்ளார். 

ஆகவே, அரசாங்கம் ஏமாற்று நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment