வெண்ணை திரண்டு வரும் போது பானையை உடைக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் செயற்படக் கூடாது - News View

About Us

About Us

Breaking

Sunday, August 25, 2019

வெண்ணை திரண்டு வரும் போது பானையை உடைக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் செயற்படக் கூடாது

“வெண்ணை திரண்டு வரும் போது பானையை உடைக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் செயற்படக் கூடாது. எதிரிகளை வீழ்த்துவதற்கு ஒற்றுமையே வலிமையான ஆயுதம் என்பதை புரிந்து செயற்பட்டால் மாத்திரமே தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ள கூடியதாக இருக்கும்.” 

இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், இந்து சமய விவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார். 

கண்டி, கம்பளையில் இன்று (25) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

“ஜனாதிபதி தேர்தல் நெருங்கும் வேளையில் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்கள் இரு அணிகளாக பிரிந்து நின்று சொற் சமரில் ஈடுபட்டு வருகின்றனர். புதிய அரசியல் கூட்டணியோ அல்லது ஜனாதிபதி வேட்பாளரோ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் இவ்வாறு கருத்து மோதலில் ஈடுபடுவதானது ஏனையக் கட்சிகளுக்கே களம் அமைத்துக் கொடுக்கும். 

கட்சியின் மத்திய செயற்குழுவில் கலந்துரையாடி தீர்மானிக்க வேண்டிய விடயங்களை சந்திக்கு கொண்டு வருவதானது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி தவறான விம்பத்தை உருவாக்கிவிடும் என்பதையும் புரிந்து செயற்பட வேண்டும். 

குறிப்பாக ‘ஒற்றுமை’யைக் கருதியே ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யும் பொறுப்பை ஐக்கிய தேசியக் கட்சிக்கே வழங்கினோம். எங்களின் இந்த விட்டுக் கொடுப்பை, தியாகத்தை எவரும் பலவீனமாக கருதி செயற்படக் கூடாது. கூட்டணி ஜனநாயகத்தை மதிப்பதாலேயே மிகவும் கௌரவமான முறையில் பங்காளிகளாக செயற்பட்டு வருகின்றோம். 

எனவே, கட்சிக்குள் கலந்துரையாடல்களை நடத்தி, மக்கள் மனநிலையை அறிந்து, மக்களால் கோரப்படும் வெற்றி வேட்பாளரை களமிறக்கும் தீர்மானத்தை ஐக்கிய தேசியக் கட்சி கூடிய விரைவில் எடுக்க வேண்டும். நாட்டின் எதிர்காலம், வெற்றி வாய்ப்பு உட்பட இதர காரணிகளையும் கருத்திற் கொண்டே வேட்பாளர் தீர்மானிக்கப்பட வேண்டும். 

மாறாக தான் தோன்றித்தனமாக, மக்கள் மத்தியில் நம்பிக்கையை இழந்த வேட்பாளர்களை போட்டிக்காக நிறுத்தக்கூடாது. அவ்வாறு நடைபெற்றால் அதற்கு எதிராகவே நாம் செயற்படுவோம். ஜனாதிபதி தேர்தலை எவ்வாறு கையாள வேண்டும் என்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்கனவே ஆலோசனைகளை வழங்கியுள்ளோம். 

அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும், கூட்டணி அரசாங்கத்துக்குள்ளும் குழப்பத்தை ஏற்படுத்தி குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பதற்கு கூட்டு எதிரணி சதித்திட்டம் தீட்டிவருகின்றது. எனவே, இந்த சதிகார வலையில் எவரும் சிக்கவேகூடாது. அரசியல் ரீதியிலான தீர்மானங்களை எடுக்கும் போது விழிப்பாகவே இருக்க வேண்டும். 

ராஜபக்ஷக்களின் ஆட்சி காலத்திலேயே நாட்டில் அராஜகங்கள், அட்டூழியங்கள் தலைவிரித்து ஆடின. ஜனநாயகம் என்பது குழிதோண்டி புதைக்கப்பட்டது. இப்படியான இருண்ட யுகத்துக்குள் இருந்து ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியே நாட்டை மீட்டெடுத்தது. 

இது மக்களுக்கும் தெரியும். எனவே, மீண்டும் இருண்ட யுகத்துக்குள் பயணிக்காது, மீட்டெடுத்த சுதந்திரத்தை, ஜனநாயகத்தை தக்க வைத்துக் கொள்வதே சிறந்த முடிவு என்பதை மக்களும் தற்போது உணர ஆரம்பித்துள்ளனர். ஆகவே, மக்கள் மத்தியில் வீண் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்கள் செயற்படக்கூடாது என்றார்.

No comments:

Post a Comment