கட்டாய விடுமுறையிலுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் இன்று (2ஆம் திகதி) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்காக அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் குறித்து வழங்கப்பட்ட ஆலோசனைகளை நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் சட்டமா அதிபர், பதில் பொலிஸ்மாஅதிபருக்கு நினைவூட்டியுள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கடமை மற்றும் பொறுப்புக்களை அலட்சியப்படுத்தியமைக்காக குறித்த இருவரையும் சந்தேகநபர்களாக பெயரிடுமாறு சட்டமா அதிபர் கடந்த வியாழக்கிழமை பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்திருந்தார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் முன்வைத்த விசாரணை உள்ளடக்கங்கள் மற்றும் எழுத்துமூலமான சாட்சிகளை ஆராய்ந்ததன் பின்னரே சட்டமா அதிபர் இதனை கூறியுள்ளார்.
இலங்கை குற்றவியல் தண்டனை சட்டக்கோவையின்படி, பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் தண்டனை வழங்கக்கூடிய குற்றத்தை புரிந்துள்ளதாக சட்டமா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் பதில் பொலிஸ்மா அதிபரினால் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment