புனித குர்ஆன், இஸ்லாம் தொடர்பில் வழங்கப்படும் பிழையான அர்த்தப்படுத்தல்களைக் களைவதற்கு சகல முஸ்லிம்களும் தயாராக இருக்க வேண்டுமென ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி தெரிவித்தார்.
கொழும்பு தாமரை தடாக மண்டபத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற அமைதி, சமாதானம் மற்றும் சகவாழ்வுக்கான தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.
இவருக்கு முன்னதாக இம்மாநாட்டில் உரையாற்றிய ஓமல்பே சோபித்த தேர், குர்ஆனில் வன்முறையைத் தூண்டும் விதமான போதனைகள் இருப்பதாகக் கூறியிருந்தார்.
எனினும், தேரர் தவறான புரிதலைக் கொண்டிருப்பதாகவும், குர்ஆன் தொடர்பில் அவர் பெற்றுக் கொண்ட விளக்கம் தவறான வகையில் அமைந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
புனித குர்ஆனில் அவ்வாறான எந்த விடயங்களும் இல்லையென்றும், குர்ஆன் தொடர்பிலும், இஸ்லாம் தொடர்பில் காணப்படும் பிழையான அர்த்தப்படுத்தல்களைக் களைவதற்கு இதுபோன்ற பல மாநாடுகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இஸ்லாம் பற்றி ஏனையவர்களிடம் உள்ள இவ்வாறான தவறான புரிதல்களை இல்லாமல் செய்ய சகல முஸ்லிம்களும் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் அழைப்புவிடுத்தார்.
இஸ்லாம் மதம் மோசமான போதனைகள் எதனையும் முன்வைக்கவில்லை. இம்மதம் எந்தளவுக்கு சகவாழ்வை விரும்புகிறது என்பதற்கு சிறந்த உதாரணமாக சவூதி அரேபியாவை எடுத்துக் கொள்ளலாம்.
இங்கு மில்லியன் கணக்கான முஸ்லிம் தவிர்ந்த இலங்கையர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் அனைவரையும் எந்தவித எதிர்ப்பும் இன்றி சவூதி ஏற்றுக் கொண்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment