இரவு 10 மணிக்குப் பின்னர் மாணவர்கள் வீதியில் இருந்தால் அழைத்துச் செல்வோம் - பொலிஸ் - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 16, 2019

இரவு 10 மணிக்குப் பின்னர் மாணவர்கள் வீதியில் இருந்தால் அழைத்துச் செல்வோம் - பொலிஸ்

மாணவர்கள் மற்றும் இளைஞர்களை போதைப் பொருள் பாவனையை விட்டும் காப்பாற்ற வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும். அத்துடன், இரவு 10 மணிக்குப் பின்னர் வீதிகளில் கூடிக் கதைத்துக் கொண்டு இருக்கும் சிறுவர்களும், இளைஞர்களும் பொலிஸுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று, நிட்டம்புவ பொலிஸ் நிலையத்தில் புதிதாகப் பதவியேற்றுள்ள நிலையப் பொறுப்பதிகாரி அனுர குணவர்தன தெரிவித்தார்.

நிட்டம்புவ சமூக பொலிஸ் பிரிவினால் (12) இரவு, கஹட்டோவிட்ட மகளிர் கல்வி வட்டக் கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊர்ப் பிரமுகர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் இந்நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கும்போது, பள்ளிவாசல்கள் மூலம் மாணவர்களுக்கு இந்தச் செய்தியை அறிவியுங்கள். மாணவர்கள் இரவில் வீதிகளில் கதைத்துக் கொண்டிருக்க வேண்டாம் எனப் பாடசாலைகளிலும் மாணவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். பெற்றோர்கள் இந்த விடயத்தில் கருத்தில் கொள்ளுங்கள். நாம் அழைத்துச் சென்றதன் பின்னர் எமக்கு சட்டத்தை நிறைவேற்ற இடமளியுங்கள்.

முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள இளைஞர்களை போதையிலிருந்து விடுவிப்பதற்கான உதவிகளை பொலிஸாருக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். சட்ட முரணான செயற்பாடுகள் குறித்த தகவல்களை யாராவது அறிந்திருந்தால், அது தொடர்பில் பொலிஸாருக்கு உடன் வழங்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.

வெளிப் பிரதேசங்களிலிருந்து வந்து உங்களது ஊர்களில் குடியேறியுள்ளவர்கள் குறித்து, மிகுந்த அவதானத்துடன் இருங்கள். அவர்கள் சிலபோது பாரிய குற்றச் செயல்களில் ஈடுபடலாம். அதனால், முழு கிராம மக்களும் துன்பத்தை அனுபவிக்க நேரிடும் என்றார்.

புத்தளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய பொலிஸ் அத்தியட்சகர் அனுர குணவர்தன, இடமாற்றம் பெற்று நிட்டம்புவ பொலிஸ் நிலையத்துக்கு வருகை தந்துள்ளார். இவருடைய வருகையின் பின்னர், கஹட்டோவிட்ட முஸ்லிம் மக்களுடன் நடாத்திய முதலாவது சந்திப்பு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.ஏ. காதிர் கான் 

No comments:

Post a Comment