யாழ்ப்பாணம் - பருத்தித்துறையில் அவதானமின்றி முக்கோண பட்டாசு கொளுத்திய குடும்பஸ்தர் ஒருவர் இரு கண்களையும் கை ஒன்றையும் இழக்க நேரிட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறை 2ஆம் குறுக்கு தெருவைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான யோகராஜா ராஜஜோதி (வயது 33) என்பவரே இந்த வெடி விபத்தில் சிக்கி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
பருத்தித்துறை பகுதியில் நடைபெற்ற மரண சடங்கில், பூதவுடலை எடுத்துச் செல்லும்போது வெடிகள் கொளுத்தப்பட்டுள்ளன. இதன்போது குறித்த நபர் மூல வெடிகள் சிலவற்றை ஒன்றாக இணைத்து கொளுத்தியுள்ளார். இதன் காரணமாகவே இவ்வாறு படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
இதனையடுத்து அவரை மீட்ட அயலவர்கள் நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
குறித்த நபரின் ஒரு கை மணிக்கட்டின் கீழ் சிதவடைந்தமையால் அதனை வைத்தியர்கள் சத்திர சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். அத்துடன் இரு கண்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் ஒரு கண் மிக மோசமாக பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தொடர்ந்தும் அவர் சிகிச்சைப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment