சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட 32 கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் அனைத்துக் குடும்பங்களின் விபரங்களையும் தமக்கு கையளிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்கு உட்பட பகுதிகளின் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல், நேற்று (01) சாவகச்சேரி பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரியின் தலைமையில் இடம்பெற்றபோதே, கிராம சேவையாளர்களிடம் பொலிஸார் குடும்ப விபரங்களை கோரியுள்ளனர்.
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட 32 கிராம சேவையாளர்கள் பிரிவுகளில் வசிக்கும் அனைத்துக் குடும்பங்களும் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். பதிவு செய்யாத குடும்பங்கள் இருப்பின், உடனடியாக அவர்களை இனங்கண்டு பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
குடும்பங்களோ, தனி நபர்களோ பதிவுகளை மேற்கொள்ளாது இருப்பின், அது தொடர்பில் தம்மிடம் அறியத் தருமாறும், அத்தோடு, பதிவு செய்யப்பட்டவர்களின் விபரங்களை தம்மிடம் கையளிக்க வேண்டும் எனவும் பொலிஸார் கோரியுள்ளனர்.
அத்தோடு, எதிர்வரும் 06ஆம் திகதி இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதனால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் இடர் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பாடசாலைகள் தொடர்பில் கிராம சேவையாளர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் தினமும் ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருப்பார். மேலதிக தேவை ஏற்படின் இராணுவத்தினரின் உதவி பெறப்படும்.
அதேவேளை, செயலிழந்துள்ள சிவில் பாதுகாப்பு குழுக்களை மீண்டும் கூட்டி, கிராமத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கூட்டத்தின்போது பொலிஸார் தெரிவித்தனர்.
மயூரப்பிரியன்
No comments:
Post a Comment