இலங்கை 'ஏ' கிரிக்கெட் அணியின் பயிற்றுநராக ரோய் டயஸ் நியமனம் - News View

About Us

About Us

Breaking

Friday, May 3, 2019

இலங்கை 'ஏ' கிரிக்கெட் அணியின் பயிற்றுநராக ரோய் டயஸ் நியமனம்

இலங்கை ஏ கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் டெஸ்ட் வீரரும், இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியின் முன்னாள் பயிற்று விப்பாளருமான ரோய் டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாக இலங்கை ஏ அணியின் பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றிய அவிஷ்க குணவர்தன, அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ரோய் டயஸை நியமிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இம்மாத இறுதியில் இந்தியாவில் ஆரம்பமாகவுள்ள இந்திய ஏ அணியுடனான 2 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டித் தொடரில் இருந்து அவர் இலங்கை ஏ அணியின் பயிற்று விப்பாளராக செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்று விப்பாளராகக் கடமையாற்றிய ரோய் டயஸ், இறுதியாக கடந்த 2018ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணியின் பயிற்சியாளராகச் செயற்பட்டிருந்தார்.

இலங்கை வளர்ந்து வரும் அணியின் பிரதான பயிற்சியாளராக அவிஷ்க குணவர்தன செயற்படுவார் எனவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ள தென்னாபிரிக்கா வளர்ந்துவரும் அணியுடனான போட்டித் தொடரிலிருந்து அவர் இலங்கை வளர்ந்து வரும் அணியின் பயிற்று விப்பாளராகச் செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வா கருத்து வெளியிடுகையில், இலங்கை ஏ கிரிக்கெட் அணியின் பயிற்று விப்பாளராக ரோய் டயஸையும், இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியின் பயிற்று விப்பாளராக அவிஷ்க குணவர்தனவையும் நியமிக்க இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது எனதெரிவித்தார்.

இதேநேரம், இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்று விப்பாளராகச் செயற்பட்ட திலான் சமரவீர இலங்கை ஏ அணியின் பயிற்று விப்பாளராக நியமிக்கப்பட்டு இருப்பதாக ஊடகங்கள் வாயிலாக வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானவை எனவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் பலமான இரண்டாம் நிலை அணியொன்று இல்லாமல் சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து தடுமாற்றத்தை சந்தித்து வந்த இலங்கை அணியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த மாற்றங்களை மேற்கொள்வதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை ஏ கிரிக்கெட் அணியின் முகாமையாளராக தேர்வுக் குழு உறுப்பினரான சமிந்த மெண்டிஸும், இலங்கை வளர்ந்துவரும் அணியின் முகாமையாளராக மற்றுமொரு தேர்வுக் குழு உறுப்பினரான ஹேமன்த விக்ரமரத்னவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பீ.எப் மொஹமட்

No comments:

Post a Comment