போதைப் பொருளை நாட்டுக்குள் கொண்டு வருபவர்கள், விற்பனை செய்பவர்கள், போதைப் பொருளை வைத்திருப்பவர்கள் மற்றும் அதனை பாவிக்கும் நபர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் தீவிர சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென தெரிவித்தார்.
போதைப் பொருள் கட்டுப்பாடு மற்றும் குற்றங்களை கட்டுப்படுத்தல் பற்றிய சட்ட வரைவுகள் தொடர்பில் நேற்று (02) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.
நச்சுத்தன்மையுடைய போதைப் பொருளை தம்வசம் வைத்திருப்பதனால் கைது செய்யப்படும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது அவர்களிடம் காணப்பட்ட போதைப் பொருளின் அளவை கணக்கீடு செய்தல் உள்ளிட்ட இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்தின் செயற்பாடுகளின் போதான வளங்களின் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் நடைமுறை ரீதியில் தாமதம் ஏற்படுவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளதுடன், அவ்விடயம் தொடர்பாக ஆய்வொன்றினை மேற்கொண்டு அத்தாமதங்களை தவிர்த்து குற்றவாளிகளுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தப்படுவதனை துரிதப்படுத்தும் வேலைத் திட்டமொன்றை சட்ட மா அதிபர் திணைக்களம், இரசாயண பகுப்பாய்வு திணைக்களம் மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றை ஒன்றிணைத்து நீதி அமைச்சின் தலைமையில் விரைவில் தயாரிக்குமாறு ஜனாதிபதி நீதி அமைச்சர் தலதா அத்துகோரலவுக்கு பணிப்புரை வழங்கினார்.
அத்தோடு போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்காக தற்போது பல்வேறு அரச மற்றும் தனியார் நிறுவனங்களினூடாக நடைமுறைப்படுத்தப்படும் வேலைத் திட்டங்கள் தொடர்பாக இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், அவ்வனைத்து நிறுவனங்களுடனும் கலந்துரையாடலொன்றினை மேற்கொண்டு, போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கான விரிவான ஒன்றிணைந்த வேலைத் திட்டமொன்றை செயற்படுத்துதல் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.
மதுவரி கட்டளை சட்டத்தில் திருத்தம் செய்தல் தொடர்பிலான முன்னேற்றம் குறித்தும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டதோடு, உரிய திருத்தங்களை நிதி அமைச்சின் ஊடாக விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். அத்தோடு போதைப் பொருள் கட்டளை சட்டத்தினை திருத்துதல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
சிறைச்சாலைகளின் பாதுகாப்பு, பூசா சிறைச்சாலையின் அபிவிருத்தி செயற்பாடுகள், வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள கைதிகளை பூசா சிறைச்சாலைக்கு மாற்றும் நடவடிக்கை தொடர்பான முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளிடம் விசாரித்தார்.
வீதி விபத்துக்களை தடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படும் வேலைத் திட்டங்கள் மற்றும் நவீன தொழிநுட்ப முறைகளுடன் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் மாற்றங்கள் குறித்தும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.
நீதி அமைச்சர் தலதா அத்துகோரல, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, சம்பந்தப்பட்ட நிறுவன தலைவர்கள் மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர உள்ளிட்ட பாதுகாப்புத்துறை பிரதானிகள் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.
No comments:
Post a Comment