அக்கரைப்பற்று றிபிள் பி (Triple B) விளையாட்டுக் கழகத்தின் 9ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மின்னொளி மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சம்மாந்துறை விளையாட்டுக் கழகம் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்து கொண்டது.
இச்சுற்றுப் போட்டி 5 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட அணிக்கு 8 பேர் கொண்டதாக இடம்பெற்றது. இறுதிப் போட்டிக்கு சம்மாந்துறை விளையாட்டுக் கழகமும், தைக்கா நகர் எவர்டொப் விளையாட்டுக் கழகமும் தெரிவானது.
நாணையச் சூழற்சியில் வெற்றி பெற்ற தைக்கா நகர் எவர்டொப் விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடி 5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுகளை இழந்து 47 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சம்மாந்துறை விளையாட்டுக் கழகம் 4.1 ஓவர்கள் நிறைவில் எதுவித விக்கட் இழப்புமின்றி வெற்றியை தனதாக்கி கொண்டனர்.
அக்கரைப்பற்று றிபிள் பி விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எம்.எச்.ஜிப்ரி தலைமையில் அக்கரைப்பற்று றிபிள் பி மைதானத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இந்நிகழ்வில் சுகாதார போசணை மற்றும் சுதேச வைத்தியத்துறை இராஜாங்க அமைச்சர் எம்.சி.பைசல் காசிம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் இராஜாங்க அமைச்சரின் இணைப்பு செயலாளருமான ஏ.எல்.தவம், தொழில்லதிபர்கள், விளையாட்டு வீரர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது சிறந்த பந்து வீச்சாளராக தைக்கா நகர் எவர்டொப் விளையாட்டுக் கழக வீரர் ஏ.றிஸாத்தும், சிறந்த ஆட்டநாயகனாக சம்மாந்துறை விளையாட்டு கழகத்தின் வீரர் எம்.எம்.சிப்றாஸூம் விருதை பெற்றுக் கொண்டனர்.
முதலாம் இடத்தை பெற்ற சம்மாந்துறை விளையாட்டுக் கழகத்திற்கு 40ஆயிரம் ரூபாய் காசோலையும் வெற்றி கிண்ணமும், இரண்டாம் இடத்தை பெற்ற தைக்கா நகர் எவர்டொப் விளையாட்டுக் கழகத்திற்கு 20ஆயிரம் ரூபாய் காசோலையும் வெற்றி கிண்ணமும், மூன்றாம் இடத்தை பெற்ற அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக் கழகத்திற்கு வெற்றி கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டதுடன், கழகத்தினால் பல்துறை சார்ந்தவர்களுக்கும் விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment