நாட்டில் ஆகக்கூடுதலான பிரச்சினைகள் உள்ள இடமாக, மட்டக்குளி கிராம சேவைப் பிரிவைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும் என்று, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடும்போது, கொழும்பு மாவட்டத்தில் மட்டக்குளி கிராமசேவைப் பிரிவிற்குள் 17 ஆயிரம் குடும்பங்கள் ஜீவிக்கின்றனர். இதேவேளை, திம்பிரிகஸ்யாய கிராம சேவைப்பிரிவில் 5 ஆயிரம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். எனவே, இலங்கையில் ஆகக்கூடுதலான பிரச்சினைகள் இருக்கும் கிராமசேவைப் பிரிவாக மட்டக்குளியவைச் சுட்டிக்காட்ட முடியும்.
பெரும்பாலானோர், கொழும்புக்கு வெளியிலேயே அதிகமான பிரச்சினைகள் இருப்பதாக எண்ணிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், கொழும்பிலேயே ஆகக்கூடுதலான பிரச்சினைகளும் சிக்கல்களும் இருந்து வருகிறது.
நாட்டில் 341 உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளன. மாநகர சபை, நகர சபை, பிரதேச சபை என்பன இதில் அடங்கும். இந்த 341 உள்ளூராட்சி மன்றங்களிலும் சேவைகள் நடைபெற்றாலும், இந்தச் சேவைகளை மேலும் பலமுள்ளதாகவும் வளமுள்ளதாகவும் மாற்றியமைப்பதற்கான சிறந்த நடவடிக்கைத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.
நாட்டிலுள்ள 341 உள்ளூராட்சி மன்றங்களில், மாத்தளை நகர சபை மாத்திரமே மிக மோசமான நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இந்நகர சபை, வாடகை அடிப்படையிலேயே நடாத்தப்பட்டு வருகின்றது. இது எமக்குள்ள பாரிய பிரச்சினையாகும்.
இப்பிரச்சினையையும் நாம் விரைவில் தீர்த்து வைப்போம். இதற்காக, தேசிய மட்டத்தில் பல முன்னோடித் திட்டங்களை செயற்படுத்தி வருகின்றோம். இதேபோன்று, மக்கள் சனத்தொகைக்கு ஏற்றவாறு, நாடளாவிய ரீதியில் உள்ள பிரதேச செயலகப் பிரிவுகளும் உரிய முறையில் நிர்மாணிக்கப்படாமல் இருப்பதும் ஒரு பெரும் குறையாக உள்ளது.
மிகச் சிறந்த உதாரணமாக கம்பஹா மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களைக் கூறலாம். இங்கு 6 இலட்சம் வாக்காளர்கள் பதிவாகியுள்ளனர். ஆனால், இம்மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் 16 பிரதேச செயலகங்கள் இயங்கி வருகின்றன. இதுவும் ஒரு தேசிய பிரச்சினையாகும் என்றார்.
ஐ.ஏ. காதிர் கான்
No comments:
Post a Comment