ஒரு கட்சிக்குள் இரு அணிகள் காத்தான்குடியில் முஸ்லிம் காங்கிரசின் நிலை - News View

About Us

About Us

Breaking

Monday, March 4, 2019

ஒரு கட்சிக்குள் இரு அணிகள் காத்தான்குடியில் முஸ்லிம் காங்கிரசின் நிலை

காத்தான்குடியில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்குள் சிப்லி அணி முபீன் அணி என இரண்டு அணிகளாக பிரிந்து இருப்பதாக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி அக் கட்சியின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான யு.எல்.எம்.என்.முபீன் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் சிப்லி பாறூக் ஆகிய இருவரும் வெவ்வேறாக கட்சி செயற்பாடுகளில் ஈடுபட்டு வருதை அவதானிக்க முடிகின்றது.

மேற்படி முபீன் இக்கட்சியின் ஆரம்பகால போராளி எனவும் இக் கட்சி காத்தான்குடியில் பல சவால்களை சந்தித்த போதெல்லாம் ஈடு கொடுத்தவர் என்றும் அன்று தொடக்கம் இன்று வரை கட்சி மாறாமல் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசிலேயே இருந்து வருவதுடன் அமைச்சர் ஹக்கீம் இராஜாங்க அமைச்சர் அலிசாஹீர் மௌலானா ஆகியோரை பயன்படுத்தி முடியுமானளவு அபிவிருத்திப் பணிகளை செய்து வருகின்றார் என முபீன் தரப்பினர் கூறுகின்றனர்.

காத்தான்குடியில் அழிந்து கிடந்த முஸ்லிம் காங்கிரசை தனது தனிப்பட்ட செல்வாக்கினால் ஒரு நிலைக்கு கொண்டு வந்தவர் பொறியியலாளர் சிப்லி பாறூக் எனவும் முன்னாள் முதலமைச்சர் ஹாபீஸ் நசீரை பயன்படுத்தி பல்வேறு அபிவிருத்திப் பணிகளை செய்தது மாத்திரமல்லாமல் சிப்லி இல்லாவிட்டால் காங்கிரஸ் வாக்கை பெறமுடியாது என சிப்லி தரப்பினர் கூறுகின்றனர்.

இந்த நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது முபீன் அமைச்சர் அலிசாஹீர் மௌலானாவை வெற்றியடைச் செய்ய பாடுபட்டார் என்றும் அந்த தேர்தலில் போட்டியிட்ட சிப்லி பாறூக்குக்கு பெரியளவிளான ஆதரவை முபீன் தெரிவிக்கவில்லை என்ற ஒரு கருத்தும் சிப்லி தரப்பினரிடமுள்ளது.

கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலின் போது இரண்டு பேரும் ஒன்றாக சேர்ந்து கட்சி வேலைகள் மற்றும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாலும் கூட உள்ளுக்குள் ஒரு புகைச்சல் இருந்தே வந்தது என்பதை அவதானிக்க முடிந்தது.

கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலின் போது சிப்லி பாறூக் போட்டியிட்ட வட்டாரத்தில் இருந்த முபீனின் ஆதரவாளர்கள் சிலர் தவிசாளர் அஸ்பருக்கு பகிரங்கமாக தமது ஆதரவினை தெரிவித்து தேர்தல் பிரச்சாரக்களத்தில் நின்று வேலை செய்ததையும் அவதானிக்க முடிந்தது.

இந்த பின்னணியில் உள்ளுராட்சி தேர்தல் முடிந்தவுடன் கட்சியின் வேலைத்திட்டங்களில் இருவரும் வெவ்வேறாகவே வேலை செய்து வருகின்றனர்.

தற்போது கட்சி புனரமைப்பு நடவடிக்கைளில் பொறியியலாளர் சிப்லி பாறூக் ஈடுபட்டு வருவதுடன் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்புத் தொகுதி அமைப்பாளராகவும் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீமினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இக் கட்சியின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளராகவும் அமைச்சர் ஹக்கீமின் இணைப்புச் செயலாளராக முபீன் செயற்பட்டு வருகின்றார்.

தற்போது இவ்விருவருமே வெவ்வேறாக கட்சி பனரமைப்பு எனக் கூறி வட்டார ரீதியாக கட்சிக்கிளைகளை புனரமைத்து வரும் நிலையில் இருவருக்குமிடையிலான அரசியல் விரிசல் இருப்பதை தெளிவாக காட்டுவதாக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

இவ்வாறு செல்லுமாயின் பலவீனமான நிலையையே அடைந்து கொள்ள முடியும் என சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

எம்.எஸ்.எம்.நூர்தீன்
சிரேஷ்ட ஊடகவியலாளர்
26.02.2019

No comments:

Post a Comment