ரத்கமவில் வர்த்தகர்கள் இருவரை கடத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபள் மற்றும் வன இலாகா அதிகாரி ஆகியோர் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று காலி நீதவான் நீதிமன்ற பிரதம நீதவான் ஹர்ஷன கெக்குனவல முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில், இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் வலஸ்முல்ல பகுதிக்கு பொறுப்பாகவிருந்த வன இலாகா அதிகாரி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டார்.
அத்துடன், குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு வந்திருந்த தென் மாகாண விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் திகதி மஞ்சுள அசேல மற்றும் ரஷீன் ஷிந்தக எனப்படும் இரு வர்த்தகர்கள் கடத்தி கொலை செய்யப்பட்டு பின்னர் எரிக்கப்பட்டமை தொடர்பில் தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பணிமனையின் விசேட விசாரணைப் பிரிவின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment