க.கிஷாந்தன்
ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரி உட்பட சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொண்ட அனைத்து நுவரெலியா மாவட்ட பாடசாலைகளுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். அதற்காக தங்களை அர்ப்பணித்து சேவையாற்றிய வலய கல்வி பணிப்பாளர்கள் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் முன்னால் கல்வி இராஜாங்க அமைச்சரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
தலாவாக்கலை ஹொலிருட் கீழ் பிரிவில் 25 தனி வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் (31.03.2019) அன்று நாட்டி வைக்கப்பட்டது. தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் கடன் திட்டத்தின் கீழ் இந்த வீடுகள் அமைக்கப்படவுள்ளன.
இதற்கான ஏற்பாடுகளை தேசிய வீடமைப்பு அதிகாரசபையுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு அதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டதன் அடிப்படையில் இந்த வீடுகள் அமைக்கப்படவுள்ளன.
இந்த வீடுகளை அமைப்பதற்காக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை 600000.00 இலட்ச ரூபா கடன் அடிப்படையிலும் 150000.00 இலட்ச ரூபா இலவசமாகவும் மொத்தமாக 750000.00 ரூபா வழங்கப்படுகின்றது. அத்தோடு 17 பேருக்கு ஆரம்ப கட்ட வேலைகளை மேற்கொள்வதற்காக தலா 30000.00 ரூபா பெறுமதியான காசோலை வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், நுவரெலியா மாவட்டத்தில் க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் திருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. நாங்கள் கடந்த காலங்களில் எடுத்துக் கொண்ட முயற்சிக்கு பலன்கிடைத்துள்ளது.
2018 ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தற்பொழுது வெளியாகியுள்ளன.அதன்படி நுவரெலியா மாவட்டத்தின் பெறுபேறுகள் திருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக ஹட்டன் ஹய்லன்ஸ் கல்லூரியில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 99.44 வீதமானவர்கள் க.பொ.த உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளார்கள். பரீட்சைக்கு தோற்றிய 195 மாணவர்களில் 194 பேர் தகுதி பெற்றுள்ளனர். அதேபோல கொட்டகலை கேம்பிரிஜ் கல்லூரியிலும் 98 வீதமான மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். அதேபோல ஏனைய பாடசாலைகளிலும் குறிப்பிடத்தக்க அளவு பெறுபேறுகள் முன்னேற்றமடைந்துள்ளது.
கடந்த காலங்களில் நாங்கள் மலையகத்தின் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தோம். வளங்கனை பெற்றுக் கொடுத்தல் ஆசிரியர் குறைபாடுகளை நிவர்த்தி செய்தல் போன்ற முக்கிய விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது. எனவே அதனுடைய பயன் தற்பொழுது கிடைக்கப்பபெற்றுள்ளது. இதனைவிடவும் இன்னும் எதிர்வரும் காலங்களில் பரிட்சை பெறுபேறுகள் அதிகரிக்க வேண்டும். ஏனெனில் பாடசாலைகளுக்கான வழங்கள் வழங்கப்படுகின்றது. அவற்றை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
வெளியான 2018 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் இதற்காக தங்களை அர்ப்பணித்து சேவையாற்றிய அதிபர்கள் ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment