துபாயில் கைது செய்யப்பட்ட பாதாள உலகத் தலைவர் மாகந்துரே மதுஷுடன் தொடர்பு வைத்திருந்த பெண் ஒருவருடையது என கூறப்படும் காரொன்று பாதுக்கையில் பொலிஸாரால் இன்று கைப்பற்றப்பட்டது.
பாதுக்கை – போரேகெதர, அரலிய மாவத்தையிலுள்ள வீடொன்றின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த கார் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
சம்பவம் தொடர்பில் குறித்த வீட்டில் வசித்த 54 மற்றும் 26 வயதான இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாகந்துரே மதுஷுடன் தொடர்பு வைத்திருந்த பெண், சில மாதங்களுக்கு முன்னர் துபாய்க்கு சென்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், அவர் மஹரகம பகுதியைச் சேர்ந்தவர் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த பெண், 2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த பாதாள உலக தலைவரான களு துஷாரவின் மனைவி என பொலிஸார் குறிப்பிட்டனர்.
பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட கார் குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
No comments:
Post a Comment