பாதாள குழுவின் தலைவன் மாகந்துரே மதூஷ் விவகாரத்தில் என்னை இணைத்து தகவல் வெளியிடப்படுகின்றமை அரசியல் பழிவாங்கல் என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அண்மையில் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலகத் தலைவன் மாகந்துரே மதூஷ் விவகாரத்தில் என்னையும் எனது குடும்பத்தினையும் இணைத்துப் பல செய்திகள் வெளியாகியிருந்தன.
இவ்வாறான தகவல்களில் எதுவித உண்மைத் தன்மையும் இல்லை. எனது குடும்பத்திற்கோ எனக்கோ போதைப்பொருள் கடத்தல் குழுவுடன் எந்தத் தொடர்பும் இல்லை.
இது எனக்கு எதிரான அரசியல் பழிவாங்கல் செயற்பாடாகவே நான் கருதுகின்றேன். பாதாள குழுத் தலைவன் மாகந்துரே மாதுஷ் மாகந்துரே பிரதேசத்தை சேர்ந்தவன் என்று தவறான கருத்துக்களே சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் மாகந்துரே மதூஷ் கம்புறுபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவன்.
அத்துடன் எனக்கோ எனது பிள்ளைகளுக்கோ போதைப்பொருள் கடத்தல் குழுவுடன் தொடர்புகளைப் பேணவேண்டிய அவசியம் இல்லை” என லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மேலும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment