யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் சுதந்திர தின எதிர்ப்பு போராட்டத்திற்கு விக்னேஸ்வரன் ஆதரவு - News View

About Us

About Us

Breaking

Friday, February 1, 2019

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் சுதந்திர தின எதிர்ப்பு போராட்டத்திற்கு விக்னேஸ்வரன் ஆதரவு

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் சுதந்திர தின எதிர்ப்பு நடவடிக்கைக்கு தமது கட்சியும் ஆதரவு வழங்கும் என்று தமிழ் மக்கள் கூட்டணி அறிவித்துள்ளது. தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. 

அந்த ஊடக அறிக்கை வருமாறு, இலங்கையின் சுதந்திர தினத்தைக் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்வரும் 4ஆம் திகதி நடத்தவிருக்கும் போராட்டங்களுக்கு தமிழ் மக்கள் கூட்டணி தனது ஆதரவை வெளியிட்டுள்ளது. 

பிரித்தானியார்களிடம் இருந்து இலங்கைக்கு 1948ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தபோதும் அதன் பலாபலன்கள் தமிழ் மக்களுக்கு கிடைக்கவில்லை. மாறாகத் தமிழ் மக்களுக்கு எதிராகப் பெரும்பான்மை சிங்கள மக்களைக் கொண்ட தொடர்ந்து வந்த பாராளுமன்றங்களினால் பல்வேறு அடக்குமுறைகளே கட்டவிழ்த்து விடப்பட்டன. 

கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்ற யுத்தத்தில் சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு மற்றும் போர்க்குற்ற செயற்பாடுகளுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை. காணாமல் ஆக்கப்பட்ட மக்களின் உறவினர்கள் வீதிகளில் தொடர்ந்தும் இரவு பகலாகத் தீர்வு எதுவும் இன்றி போராடி வருகின்றார்கள். 

சட்டமுறைமைகளுக்கு மாறான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவிக்கும் தமிழ் அரசியல் கைதிகள் இன்னமும் விடுதலை செய்யப்படவில்லை. யுத்தம் முடிந்து பத்து வருடங்கள் ஆகியும் தடைச் சட்டம் இன்னமும் கைவாங்கப்படவில்லை. 

பலவந்தமாக தமது காணிகள் பறிக்கப்பட்ட நிலையில் இராணுவ முகாம்களுக்கு முன்பாக நின்று பாதிக்கப்பட்ட எம் மக்கள் தொடர்ந்து இரவு பகலாகப் போராடிவருகின்றார்கள். 

இந்த நிலையில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சுதந்திர தினம் என்று பிரகடனப்படுத்தப்பட்ட தினத்தை தமிழ் மக்களின் குரலை சர்வதேசத்திடம் ஓங்கி ஒலிக்கச் செய்து நீதி கேட்கும் வகையில் தமிழர் தாயகத்தில் போராட்டங்களை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளமை பொருத்தமானது. 

இதற்கு எமது முழுமையான ஆதரவை நாம் வழங்குகின்றோம். எமது கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் இந்தப் போராட்ட நிகழ்வுகளில் கலந்துகொள்வார்கள் என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தமது செய்தி வெளியீடு ஒன்றில் தெரிவித்துள்ளார். 

யாழ். நிருபர் பிரதீபன்

No comments:

Post a Comment