தேசிய சர்வதேச தொழிற்சந்தைகளுக்கு பொருத்தமான தொழிற்திறன்களுடன்கூடிய பட்டதாரிகளை நாட்டின் பல்கலைக்கழக முறைமையினுள் உருவாக்கும் பொறுப்பை அதிகாரிகள் இனிமேலும் தட்டிக்கழிக்க முடியாதென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
நேற்று (02) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற கலாநிதி மொஹான் லால் கிரேருவினால் எழுதப்பட்ட “இலங்கையின் கல்வி முறைமைக்கும் தொழிற் சந்தைகளுக்கும் இடையிலான பொருத்தப்பாடின்மை” என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொழிற்சந்தைக்கு பொருத்தமாக கல்வி முறைமையின் திட்டங்களும் கொள்ளைகளும் மாற வேண்டும் என்ற குரல் எமது நாட்டில் இன்று நேற்று எழுந்தவை அல்ல எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அவை நீண்டகால கோரிக்கையாக இருந்துபோதிலும் எவ்வளவு தான் ஆராய்ச்சிகள் வெளி வந்தபோதும் அந்த பிரச்சினைக்குரிய தீர்வு இன்னும் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
தமது தொழில் உரிமைகளை மட்டும் கோரி குரல் கொடுக்கும் எவரினதும் கவனம் இந்த விடயம் பற்றி இல்லாதிருப்பது கவலைக்குரியதாகுமென்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். இந்த பிரச்சினைக்குரிய தீர்வு கிடைக்கும் நாளிலேயே பட்டதாரிகள் தொழில்கோரி வீதிகளில் போராட்டங்களை நடத்தும் யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
கலாநிதி மொஹான் லால் கிரேரு அவர்களினால் கலாநிதி பட்டத்திற்காக சமர்ப்பித்த “இலங்கையின் கல்வி முறைமைக்கும் தொழிற்சந்தைகளுக்கும் இடையிலான பொருத்தப்பாடின்மை” என்ற ஆய்வு இவ்வாறு நூலாக வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் கல்வி முறைமையின் மூலோபாயங்கள் குறித்து இந்த நூலில் ஆழமாக கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், தொழிற்சந்தையில் ஏற்பட்டுள்ள சவால்களின் ஊடாக ஒட்டுமொத்த கல்விச் செயற்பாடுகளினதும் பொறுப்புக்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது
நூலின் முதற்பிரதி கலாநிதி மொஹான் லால் கிரேருவினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. சபாநாயகர் கரு ஜயசூரிய, திலங்க சுமதிபால, பேராசிரியர் ஜே.பி.திசாநாயக்க, பேராசிரியர் மொஹான் டி சில்வா உள்ளிட்ட அதிதிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment