ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவது உறுதி - ஜனாதிபதி பொலன்னறுவையில் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, February 9, 2019

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவது உறுதி - ஜனாதிபதி பொலன்னறுவையில் தெரிவிப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவது உறுதியானதாகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இது தொடர்பில் சட்ட ரீதியாக எழுந்துள்ள பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இன்று (09) முற்பகல் பொலன்னறுவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மறுசீரமைப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பொலன்னறுவை மாவட்ட மக்கள் சந்திப்பு இன்று பெரும் எண்ணிக்கையான கட்சி அங்கத்தவர்களின் பங்கேற்புடன் பொலன்னறுவை புதிய நகரில் இடம்பெற்றது.

ஜனாதிபதி தேர்தல் உரிய காலத்தில் இடம்பெறும் என்றாலும் சிலர் கூறுவது போன்று அதனை பலவந்தமாக நடாத்துவதற்கு எவருக்கும் முடியாது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நாட்டின் எதிர்கால நலனுக்காக பல்வேறு தீர்மானங்களை மேற்கொள்ள கடந்த நான்கு வருட காலப்பகுதியில் ஜனாதிபதி என்ற வகையில் தான் நடவடிக்கை எடுத்ததாக குறிப்பிட்ட அவர், இன்று பாரிய சமூக சவாலாக மாறியிருக்கும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றங்களை தடுப்பதற்காக முன்னெடுக்கப்படும் விரிவான நிகழ்ச்சித் திட்டத்திற்கு தான் முக்கியத்துவமளித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

இதற்காக பொலிஸ் திணைக்களத்தை வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத வகையில் பலப்படுத்தி இருப்பதைப்போன்று, அதில் மேலும் சில முக்கிய மாற்றங்களை அடுத்த சில மாதங்களில் மேற்கொள்ளவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பண்டாரநாயக்க அவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை கட்டியெழுப்பியது ஒரு அரசியல் கட்சியாகவேயன்றி சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கையை சுதேச பாரம்பரியங்களை முன்நிறுத்திய ஒரு நாடாக கட்டியெழுப்பும் விரிந்ததோர் சக்தியாகவேயாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று நாட்டின் சுதந்திரத்தையும் எமது பாரம்பரியங்களையும் பாதுகாத்து நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினாலேயே முடியும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, யார் எதனை கூறினாலும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஒருபோதும் பலவீனமடையவில்லை என்றும் அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் கட்சி ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியே என்பதை எவரும் மறந்துவிடலாகாது என்றும் குறிப்பிட்டார்.
பண்டாரநாயக்க அவர்களுக்கு பின்னர் தனது அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களின் ஊழல், மோசடி பற்றி கண்டறிவதற்காக ஆணைக்குழு ஒன்றை அமைத்த ஜனாதிபதி நானேயாவேன் எனக் குறிப்பிட்ட அவர், மத்திய வங்கி கொள்ளை பற்றி கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவைப் போன்று 2015 - 2018 காலப்பகுதியில் அரசாங்க நிறுவனங்களில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் ஊழல், மோசடிகளை கண்டறிவதற்காக தான் நியமித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை நடவடிக்கைகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளது என்றும் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் நிமல் சிறிபால டி சில்வா, பொதுச்செயவாளர் தயசிறி ஜயசேகர, வட மத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, மஹிந்த அமரவீர, வீரகுமார திசாநாயக்க, திலங்க சுமதிபால, இசுர தேவப்பிரிய, காமினி திலகசிறி, பேசல ஜயரத்ன உள்ளிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் பெரும் எண்ணிக்கையான அங்கத்தவர்கள் இம்மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment