இலவசக் கல்வியை தனியார் மயப்படுத்தும் நோக்கத்தில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் செயற்பட்டு வருகிறார் என்று நாடாளுமன்ற உறுப்பினரான பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “எமது நாட்டில் புதிய அரசமைப்பு விவகாரம் போல, இலவசக் கல்வியை தனியார் மயப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளும் தற்போது பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.
நாம் அனைவரும் இலவசக் கல்வியின் ஊடாகத்தான் கற்றுள்ளோம். மிகவும் குறைந்த அளவிலானோர் தான் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளில் கற்றுவருகிறார்கள்.
ஆனால், தற்போதைய கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், இலவசக் கல்வியை நிறுத்தி அதனை தனியார் மயப்படுத்தும் நோக்கத்துடன் அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பித்துள்ளார்.
மஹிந்த சிந்தனையில், அரசாங்கப் பாடசாலைகளை பலப்படுத்தும் திட்டங்களே பிரதானமாக இருந்தன. மூன்று பிரதேச சபைகளுக்கு ஒரு தேசிய பாடசாலையை நாம் அன்று அமைத்தோம்.
எனினும், ஐக்கிய தேசியக் கட்சி இதனை இன்று தலைக்கீழாக மாற்றியுள்ளது. இது எதிர்க்கால சந்ததியினருக்கு செய்யும் பாரிய துரோகமாகும். இதனை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.
இதுதொடர்பில் எம்முடன் பகிரங்க விவாதமொன்றுக்கு வருமாறு நாம் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்துக்கு சவால் விடுக்கிறோம். முன்னாள் கல்வி அமைச்சர் என்ற வகையிலேயே நான் அவருக்கான அழைப்பை விடுக்கிறேன்.
இவர்களின் இவ்வாறான செயற்பாடுகளால் தான் கல்வி அமைச்சை இன்று எவரும் மதிக்காத நிலைமை ஏற்பட்டுள்ளது” என அமைச்சர் பந்துல குணவர்த்தன மேலும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment