தமிழ் மக்களுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமானால் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒற்றுமையாக செயற்பட வேண்டிய அவசியமுள்ளது.
கூட்டமைப்பின் 14 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையாக உள்ளதாலே பாராளுமன்றத்தில் பலமான சக்தியாகவுள்ளதாக புளொட் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு, பூம்புகாரில் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் எந்தத் தேர்தலிலும் தமிழ் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து வாக்களிக்கவில்லை. தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவரை மீண்டும் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததாலேயே ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளித்தது.
மஹிந்த ராஜக்ஷவைத் தோற்கடிக்கவே சரத் பொன்சேக்கா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு தமிழ் மக்கள் வாக்களித்தனர். ஆனால் அவர்கள் மீது எந்த நம்பிக்கையையும் தமிழ் மக்கள் வைக்கவில்லை.
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எழுத்து மூலமான உறுதிமொழி வழங்குவதாக தெரிவித்திருந்த போதிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் அதனை பின்னர் பெற்றுக் கொள்ளவில்லை.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், இரா.துரைரெட்ணம், முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் லிங்கநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த அலுவலக திறப்பு விழாவில் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் அமைப்பாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர். இதன்போது வறிய மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளும் வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment