அனைத்து தனியார் கல்வி நிலையங்களும் இரவு ஏழு மணிக்கு முன்பாக சேவையை முடித்துக் கொள்ள வேண்டும் என வவுனியா நகர சபையின் 11ஆவது அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வவுனியா நகர சபையின் 11ஆவது அமர்வு நகர சபை தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் நேற்று (26) நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணிவரை நகர சபை உறுப்பினர்களால் பல்வேறு பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டு விவாதங்கள் நடைபெற்றன.
முக்கியமாக நகரப் பகுதிகளில் தனியார் கல்வி நிலையங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க முடியாது. அத்துடன் இரவு ஏழு மணிக்கு முன்பாக அனைத்து தனியார் கல்வி நிலையங்களும் தங்கள் சேவையை முடித்துக் கொள்ள வேண்டும்.
அத்துடன் மாணவர்களின் சுகாதார நலன்கள் குறித்தும் நகர சபை கவனத்தில் எடுத்து அதனை நிவர்த்தி செய்யுமாறு வவுனியாவில் இயங்கி வரும் தனியார் கல்வி நிலையங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. இதனை மீறும் தனியார் கல்வி நிலையங்கள் மீது கடுமையான Legal action எடுக்கப்படும் என நகர சபை தவிசாளர் இ.கௌதமன் தெரிவித்திருந்தார்.
வவுனியா நகர சபை அமர்வில் வவுனியாவில் மாட்டிறைச்சி விலை 650.00 ரூபாவாக நிர்ணயம் செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில் மாட்டிறைச்சி 850.00 ரூபாவரை அதிக விலைக்கு விற்கப்படுவதாக நகர சபை உறுப்பினர் எஸ்.செந்தில்ரூபன் சபையின் கவனத்திற்கு கொண்டு வந்ததனைத் தொடர்ந்து இவ்விடயம் தொடர்பாக நகர சபை தவிசாளர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தார்.
நுண்நிதி நிறுவனங்களால் பெண்கள் பெரும் துன்பங்களை எதிர்கொள்வதாகவும் அரசாங்கம் குடும்ப பெண்களுக்கு சலுகையாக வழங்கிய ஒரு இலட்சம் ரூபா பணத்தை வங்கிகள் வழங்க முன்வருவதில்லை என குற்றஞ்சாட்டிய நகர சபை உறுப்பினர் சமந்தா ஜெபராணி மாவட்ட செயலகம் இப்பிரச்சினையில் தலையிட்டு தீர்வு பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment