சட்டவிரோதமாக ரீயூனியன் தீவிற்கு சென்று கைதான 70 பேரையும் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை - News View

About Us

Add+Banner

Tuesday, February 12, 2019

demo-image

சட்டவிரோதமாக ரீயூனியன் தீவிற்கு சென்று கைதான 70 பேரையும் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை

reunion-boat-people
சட்டவிரோதமாக ரீயூனியன் (Réunion) தீவிற்கு சென்ற நிலையில், அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் 70 பேரையும் நாளை மறுதினம் (14) விமானம் மூலம் நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் தெரிவித்தது. பிரான்ஸ் அதிகாரிகளின் பாதுகாப்புடன் இவர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்படவுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் 09 ஆம் திகதி நீர்கொழும்பு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்ற படகொன்று காணாமல் போயுள்ளதாக படகின் உரிமையாளர் கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் திகதி நீர்கொழும்பு பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

‘வே – பிரஷங்சா’ எனப்படும் நீண்ட நாள் மீன்பிடி படகொன்றே காணாமல் போயிருந்தது. அதற்கமைய, மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் படகோட்டியாக செயற்பட்ட நபர், குறித்த 70 பேரிடமும் ஒரு இலட்சம் முதல் 10 இலட்சம் ரூபா வரை அறவிட்டு பிரான்ஸின் ரீயூனியன் தீவு வரை அழைத்துச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

இம்மாதம் 05 ஆம் திகதி படகிலிருந்தவர்கள் ரீயூனியன் தீவைச் சென்றடைந்தனர். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கண்டி, புத்தளம், அம்பாறை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 70 பேர் மடகஸ்காருக்கு 175 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ரீயூனியன் தீவிற்கு சென்றுள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு சென்றவர்களுள் 5 சிறு பிள்ளைகளும், 8 பெண்களும் அடங்குவதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் தெரிவித்தது. ரீயூனியன் பிரான்ஸிற்கு சொந்தமான தீவாகும்.

சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த இந்த தீவிற்கு இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக பயணிப்பதாயின், 2200 -க்கும் அதிக கடல் மைல் தூரம் பயணிக்க வேண்டும். 10 நோட்ஸ் என்ற வேகத்தில் பயணித்தால், தீவை சென்றடைய 8 நாட்களும் 5 மணித்தியாலங்களும் ஆகும்.

ரீயூனியன் தீவிற்கு படகு மூலம் சென்றவர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தின் நடவடிக்கை பணிப்பாளர் கல்யாணி ஹேவாபத்திரண குறிப்பிட்டார்.

இவ்வாறு சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்துவதற்கு இலங்கை அரசின் புலனாய்வுப் பிரிவும் அமைச்சும் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *